தாங்க முடியாத வெயில்.. சென்னையில் பள்ளி மாணவர் சுருண்டு விழுந்து பலி! 'வெட் பல்ப்' தாக்கமா?
சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு அதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி வருகிறது.
நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது. இன்று காலை 11 மணிக்கே சென்னையில் வெயில் உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் 12ம் வகுப்பு மாணவர் சக்தி. இவரது நண்பர் ஹரிசுதன் எனும் சக மாணவர் நேற்று இதய நோயால் உயிரிழந்துள்ளார். எனவே தனது நண்பனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று சக்தி சென்றிருக்கிறார். அப்போது வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக மாணவர் சக்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவன் சக்திக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கோடைக்காலங்களில் வெயிலை விட காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவுதான் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கும் நிகழ்வை 'ஈரக்குமிழ் வெப்பநிலை' (வெட் பல்ப்) என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருக்கும் போது நீங்கள் நல்ல நிழல் பகுதியில் இருந்தாலும், பருத்தியால் ஆன ஆடையை அணிந்திருந்தாலும் கூட இது உங்களை கொல்லும் அளவுக்கு ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதாவது வெயில் அதிகமாக இருக்கும்போது உடலிருந்து நீர், வியர்வை மூலம் வெளியேறும். இந்த வியர்வை ஆவியாகும்போது உடலின் வெப்பமும் ஆவியாகிவிடுகிறது. இதனால் உடல் குளிர்ச்சியடையும். வியர்வையின் பணி இதுதான். இதற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால், காற்றின் ஈரப்பதம் அதிகமானால், இந்த செயல்முறையானது தாமதமாகும், வியர்வையும் சுரக்காது. இதனால் உடலின் வெப்பநிலை குறையாது. வெயில் அதிகமாக இருந்து நமக்கு வியர்வை வரவில்லை எனில் அது ஆபத்தை ஏற்படுத்தும்.
35 டிகிரிக்கு மேல் காற்றில் ஈரப்பதம் இருந்தால் உடலில் உள்ள வெப்பம் வெளியேறாது. எனவே உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் நேற்று 32 டிகிரிக்கு வெட் பல்ப் வெப்பநிலை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications