தமிழகத்தில் இன்று முதல்.. தளர்வில்லாத முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் அடைப்பு.. போலீசார் கண்காணிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 31-ம் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள் தளர்வுகளுன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.
ஆனால் மக்கள் இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வந்தனர். கொரோனா கடந்த 2 நாட்களாக சற்று குறைந்தாலும் கட்டுக்குள் வரவில்லை.

முழு ஊரடங்கு
இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கைத் தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கவும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் காய்கனிகள்
வங்கிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் வீடுகளுக்கு வந்து வினியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை மதியம் முதல் நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடைகள் அடைக்கப்பட்டன
ஆனால் கொரோனாவை மொத்தமாக கொண்டு வரும் வகையில் மக்கள் கட்டுபாடில்லாமல் சந்தைகள், கடைகளில் அலை, அலையாக சென்றனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 4,500 பேருந்துகளும் விடப்பட்டன. இதிலும் கூட்டம் அலைமோதியது. இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு தமிழகத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம் என அனைத்து நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

போலீசார் எச்சரிக்கை
சென்னையில் இருந்தும் 11.30 மணிக்கு கடைசி பேருந்து தென் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றம் சென்றுதான் விடுவிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். அத்தியாவசிய பணிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் ஒருவர் மட்டும் தான் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை.இந்த முழு ஊரடங்கு மூலம் கொரோனா முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications