அந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி!
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் இடையே ஒரு முக்கியமான ஒற்றுமை காணப்படுகிறது.
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் இடையே ஒரு முக்கியமான ஒற்றுமை காணப்படுகிறது. சமீப நாட்களில் அனுமதிக்கப்பட்ட 380 நோயாளிகளிடம் முக்கியமான ஒரு ஒற்றுமை காணப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் மொத்தம் 485 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 8 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் பலியாகி உள்ளனர். 474 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா காரணமாக சென்னைதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா காரணமாக 91 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திண்டுக்கல்லில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 37 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி எத்தனை பேர்
தமிழகத்தில் கொரோனா பாதித்த நோயாளிகள் 485 பேரில் 437 டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். டெல்லியில் மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை இந்த மாநாடு நடந்தது. மத அமைப்பான டாப்லிகி ஜமாத் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் டெல்லியில் வருடா வருடம் நடக்கும். இதில் கலந்து கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக நாடு முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது.

தாமாக முன் வந்து தகவல் தெரிவித்தனர்
இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தாமாக முன் வந்து தகவல் கொடுக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுக்க இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர். ஒரே நாள் இரவில் வரிசையாக பலர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர். 1103 பேர் வரை முன் வந்து தமிழக அரசிடம் இது குறித்து தகவல் கொடுத்தனர்.

யாருக்கும் அறிகுறி இல்லை
இந்த வேகம்தான் தற்போது கை கொடுத்துள்ளது. இதனால் தற்போது டெல்லி மாநாடு சென்றவர்கள் எல்லோரும் கண்டுபிடிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த புது நோயாளிகள் 437 பேருக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை ஒன்றே ஒன்றுதான். இதில் 380 பேருக்கு கொரோனா அறிகுறியே தென்படவில்லை. அதாவது இவர்களுக்கு அறிகுறி ஏற்படும் முன்பே சோதனை செய்து அவர்களுக்கு முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள்.

சீக்கிரமாக செயல்பட்டனர்
பொதுவாக கொரோனா ஒருவரை தாக்கி 14 நாட்களுக்குள் அறிகுறி தென்படும். சிலருக்கு அறிகுறியே வராமல் கூட கொரோனா தாக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த 380 பேருக்கு அறிகுறி ஏற்படும் முன்பே வேகமான சோதனை மூலம் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதாவது கொரோனா உடலுக்குள் சென்று பிரச்சனை ஏற்படும் முன் அதை தமிழக மருத்துவர்கள் சோதனை மூலம் துரிதமாக கண்டுபிடித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு குறைவு
அதாவது அறிகுறி தென்படும் முன் தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. அதேபோல் தொடக்கத்திலேயே கண்டுபிடித்ததால் இவர்களை எளிதாக குணப்படுத்த முடியும். வேகமான சோதனையும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன் வந்து தகவல் தெரிவித்ததும்தான் இதற்கு காரணம் ஆகும்.

ஒரு நல்ல செய்தி
தமிழகத்தில் கொரோனா சோதனை தற்போது வேகம் எடுத்துள்ளது. தினமும் 100 பேருக்கும் அதிகமாக கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால்தான் சந்தேகம் இருந்தாலே போதும், அறிகுறி தென்படும் முன்பே கொரோனா சோதனைகளை முடுக்கிவிடுகிறார்கள். தென்கொரியாவில் இதேபோல் அறிகுறி ஏற்படும் முன்பே பலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications