தாம்பரம் பயணிகளுக்கு ஜாக்பாட்.. 9 லிஃப்ட், 10 எஸ்கலேட்டர்களுடன் புதிய பாலம்
சென்னை: சென்னை புறநகர் மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய நடைமேம்பாலம் மார்ச் மாதம் திறக்கப்பட இருக்கிறது. ரயில் இன்போ தமிழ் என்ற பெயரில் எக்ஸ் தள பக்கத்தில்வெளியிடப்பட்ட பதவின்படி தகவல்களை பார்ப்போம்.
சென்னை புறநகர் மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய நடைமேம்பாலம் மார்ச் மாதம் திறக்கப்பட இருக்கிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாவது ரயில் முனையமாகத் #தாம்பரம் அறிவிக்கப்பட்ட பிறகு, இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
சுமார் ₹24 கோடி மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தில், பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன:
விசாலமான பாலம்: இந்தப் புதிய நடைமேம்பாலம் 8 மீட்டர் அகலம் கொண்டதாக அமைகிறது. இதனால் கூட்ட நெரிசலின்றிப் பயணிகள் வசதியாகச் செல்ல முடியும்.
எஸ்கலேட்டர் வசதி: முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமமின்றி ஏறிச் செல்ல, 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவுள்ளன.
லிஃப்ட் வசதி: இதுதவிர, கனமான உடைமைகளுடன் வரும் பயணிகளுக்காக 9 லிஃப்டுகளும் (Lifts) பொருத்தப்படவுள்ளன.
இணைப்பு: இந்தப் பாலம் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை நேரடியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் திறப்பு!
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வரும் மார்ச் மாதம் (March 2026) இந்தப் பாலம் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர ரயில்களில் செல்லும் பயணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் புதிய பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தை பொறுத்தவரை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்தபடியாக சென்னையின் 3வது முனையாக திகழ்கிறது. ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதி என்று அழைக்கப்பட்ட தாம்பரம், இன்று மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான் தாம்பரம் செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் ரயில்வே விரைவில் தொடங்க உள்ளது.
அதேபோல் தாம்பரம் ரயில் நிலையம் பல கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே புதிய ரயில் தண்டாவளங்கள் அமைக்கப்பட்டது. இனி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து செல்ல போகின்றன. ஏற்கனவே பல்வேறு ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே செல்கின்றன. எனவே தான் பயணிகளின் நலன் கருதி மேம்பாலம் அதிநவீன வடிவில் அமைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications