சென்னை மழை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்! சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அரசு நிர்வாகம்!
சென்னை: சென்னை மழை வெள்ளம் கற்றுக்கொடுத்துள்ள பாடத்தை அடிப்படையாக கொண்டு தமிழக அரசின் நிர்வாக மற்றும் ஒப்பந்தப்பணிகள் தொடர்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ரூ.4,000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டு பணிகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படும் நிலையில், திருப்புகழ் ஐ.ஏ.எஸ். வகுத்துக் கொடுத்த திட்ட அறிக்கையின் படி தான் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,000 கோடி என்னாச்சு என்ற கேள்வியை எழுப்பியதுடன் வெள்ளை அறிக்கையும் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் வழக்கமான குற்றச்சாட்டு, அரசியல் என இதனை அரசு சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. பாதிக்கப்பட்ட மக்களும் 4000 கோடி எங்கே என ஆவேசமாக தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். மழை பெய்தால் தண்ணீர் நிற்காது என தன்னிடம் இதுவரை எந்தெந்த அதிகாரிகள் ரிப்போர்ட் சொன்னார்களோ அவர்களையே அழைத்து சென்னை வெள்ளத்துக்கான காரணத்தையும் தண்ணீர் 2 நாட்கள் கழித்து வடிந்ததற்கான காரணத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிய வேண்டும்.
புயல் வந்ததால் கடல் கொந்தளிப்புடன் இருக்கிறது இதனால் முகத்துவாரத்தில் தண்ணீரை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற காரணம் கடந்த திங்கள்கிழமை இரவு வரை பொருந்தும். ஆனால் அதற்கு பிறகும் இந்தக் காரணம் பொருந்துமா என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சாய்ஸாகவே விட்டுவிடலாம்.
புயல் வெள்ள பேரிடரின் போது சென்னை மாநகராட்சி நிர்வாகமும், மேயரும் செய்ய வேண்டிய பணிகளை கூட ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வந்து செய்யவேண்டிய சூழல் நிலவியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதேபோல் பகுதி வாரியாக வார்டு வாரியாக மாமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் செய்ய வேண்டிய பணிகளை கூட முதலமைச்சர் ஸ்டாலின் தான் நேரடி விசிட் செய்து கவனித்துக்கொண்டார். இத்தனைக்கும் அவரை மருத்துவர்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியும் மனம் கேட்காமல் தெருவுக்கு ஓடி வந்து நிவாரணப் பணிகளை வேகப்படுத்தினார்.
இப்படி தொட்டதெற்கெல்லாம் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் ஓடி ஓடிச் செல்ல முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. இதனால் இனி வரும் காலங்களில் முதல்வர் சென்றாலும் செல்லாவிட்டாலும், பணிகள் கச்சிதமாக நடைபெறும் வண்ணம் நிர்வாக அமைப்பு முறைகளில் தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications