ஆம்னி பஸ், அரசு பஸ்.. பேருந்து போக்குவரத்து முறைப்படுத்தப்படுகிறதா? அரசுக்கு பறந்த நோட்டீஸ்
சென்னை: பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தை முறைப்படுத்தவும், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், சிவில் விமான போக்குவரத்து மற்றும் ரயில்வே துறைகளில் உள்ளது போல ஒரு தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் விபத்து நடப்பது அதிகரித்துவிட்டது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலை, பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் சாலை உள்பட முக்கியமான பல்வேறு சாலைகளில் தினமும் விபத்து நடக்கிறது. தமிழ்நாட்டில் தினமும் பல இடங்களில் விபத்து நடக்கிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகமாகி வருகிறது. இந்த விபத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த எஸ். தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோட்டார் வாகன சட்டம் மற்றும் 2019-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களுக்குத் தண்டனைகள் உள்ளன. ஆனால், இந்த விதிகள் மற்றும் சட்டங்கள் அதன் உண்மையான நோக்கத்தில் சரியாக நடைமுறைப்படுத்தப்படுது கிடையாது.
வாகனத் தொழில்துறை தரநிலைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் பேருந்துகள் மீது மாநிலம் தழுவிய அளவில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும் . இது தொடர்பாக ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பேருந்து போக்குவரத்தை முறைப்படுத்த ஒரு பிரத்யேக ஆணையத்தை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications