குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்.. 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்
சென்னை: திருத்தணி அருகே கணவன் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர எல்லையோர பகுதியான விஜயபுரம் அடுத்துள்ள ஸ்ரீஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பூர்ணிமா (32)
இவர்களுக்கு அகிலா என்ற வயது 6 மகளும், யஸ்வந்த் என்ற 8 வயது மகனும் இருந்தனர். ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம்.

தத்தளித்த தாய்
இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஒரு வாரமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து போனார் பூர்ணிமா. குடிகார கணவனுடன் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி காலம் தள்ளுவது என தத்தளித்து வந்தார் பூர்ணிமா.

கிணற்றில் தள்ளி கொலை
இந்நிலையில் தனது இரு குழந்தைகளுடன் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மாந்தோப்புக்கு சென்ற அவர் அங்கிருந்த விவசாய கிணற்றில் இரு குழந்தைகளையும் துணியால் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

தூக்கில் தொங்கினார்
அதனைத் தொடர்ந்து பூர்ணிமாவும் அதே மாந்தோப்பில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்ததும் புத்துார் டி.எஸ்.பி., சவுமியலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சின்னாபின்னமான குடும்பம்
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியால் ஒரு குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications