அடுத்த பிராது-பெரியாரை கொச்சைப்படுத்தி பேசினார் இயக்குநர் பா.ரஞ்சித்? கொந்தளிக்கும் பெரியாரிஸ்டுகள்!
சென்னை: நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விழாவில் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாக பெரியார் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இந்தத் திரைப்பட நிகழ்ச்சியில்தான் நாத்திகம், பெரியார் குறித்து பா.ரஞ்சித் பேசினார். ஆனால் பா.ரஞ்சித் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்; இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்கிறார் மூத்த பெரியாரிஸ்டான காட்டாறு குழுவின் அதி அசுரன்.

இது தொடர்பாக அதி அசுரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெரியார் நாத்திகத்தைப் பேசினர். கடவுள் மறுப்பைப் பேசினார். ஆனால் , இந்து மத வாழ்க்கை முறைக்கு எதிராக ஒரு மாற்றுப் பண்பாட்டை, மாற்று வாழ்வியலை முன்வைக்கவில்லை" என்று தோழர் பா.இரஞ்சித் பேசியுள்ளார். 31 ஆம் தேதி வெளியாக உள்ள அவரது படத்தின் ப்ரமோஷனுக்காக பெரியாரைக் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரிய, சமூகப் பொறுப்பற்ற பேச்சாகும்.
பெரியாரை வெறும் நாத்திகர் என முத்திரை குத்துவதே பெரும் தவறு. "நாத்திகம்" என்பதைப் பெரியார் கண்டுபிடித்துப் பேசவில்லை. புத்தரும் நாத்திகத்தைக் கண்டுபிடிக்கவில்லை. புத்தருக்கும் முன்பே இங்கு நாத்திகம் பேசப்பட்டுள்ளது.
ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலையை அடிப்படையாகக் கொண்ட "பெரியாரிய நாத்திகம்" என்று தனியாக ஒரு நாத்திகப் பிரிவை ஒரு மக்கள்திரள் அமைப்பாகக் கட்டியவர் பெரியார். அதை ஒரு வாழ்வியலாக வடிவமைத்து, தனது காலத்திலேயே பல்லாயிரம் தோழர்களின் வாழ்விலேயே செயல்படுத்தியும் காட்டியவர் பெரியார்.

இந்து பார்ப்பன, பார்ப்பனிய வாழ்வியலுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் "பெரியாரிய நாத்திக வாழ்வியலை இன்றைய பெரியாரிஸ்ட்டுகள் எவரும் பின்பற்றவில்லை" என்றோ, "பெரியாரிய நாத்திக வாழ்வியல் வெகுமக்களுக்குப் பயன்படவில்லை" என்றோ தோழர் இரஞ்சித் பேசியிருந்தால், அது ஒரு நல்ல விவாதத்தைத் தொடங்கியிருக்கும்.
ஆனால் பெரியார் ஒரு மாற்று வாழ்வியலை உருவாக்கவே இல்லை என்று பேசியது அவரது அறியாமை அல்ல, திட்டமிட்ட அவதூறு.
பதிலுக்கு புத்தரையும், அம்பேத்கரையும் யாராவது சிலர் விமர்சனம் செய்வார்கள். அதை வைத்து "பெரியார் VS அம்பேத்கர்" என்ற பிரிவினைப் போக்கை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும் என எண்ணுகிறேன். அனைவரும் அவரது உரையைக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு பெரியாரிஸ்ட் அதி அசுரன் எழுதி உள்ளார்.












Click it and Unblock the Notifications