விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் கோவையில் பேரறிவாளன்... வெடித்தது புதிய சர்ச்சை
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படத்தை கோவையில் பேரறிவாளன் திறந்து வைத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் பேரறிவாளன்
இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன், தமிழகம் முழுவதும் தமது ஆதரவாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் ஒரு சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபாகரன் படத்தையும் பேரறிவாளன் திறந்து வைத்தார். இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பாக, ஆதரவாக பதிவிடப்பட்டுள்ள கருத்துகள்.
புலி ஆதரவு நிலையா?
Veeranmani Balamurugan: பேரறிவாளனும், அற்புதம் அம்மாளும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் படத்தை திறந்து வைத்த நிகழ்வு ஆரோக்கியமானது அல்ல. தீடிரென கையளித்த படத்தை தெரியாமல் திறந்து வைத்து விட்டார்கள் என்பது போன்ற முட்டுகளும்,உருட்டுக்களும் அர்த்தமற்றவை. நீதியின் எஞ்சிய சட்ட வாய்ப்பு எனும் கருணையினாலும், போதிய தண்டனையை அனுபவித்து விட்டதாலேயே விடுவிக்கப்பட்டவர் பேரறிவாளன். நிரபராதி என்று அல்ல. ராஜீவ் உள்ளிட்டோரின் படுகொலைக்கு இதுவரை விடுதலைப் புலிக்களுக்கு எதிராக தாயும் மகனும் கருத்து சொன்னதாக நான் எங்கும் படிக்க வில்லை. ஏன் இப்போது கூட அறியாமல் படத்தை திறந்து வைத்து விட்டோம் என்று இருவரையும் அறிக்கை விட சொல்வதை விட்டு விட்டு முட்டுக் கொடுப்பது ஏற்புடையது அல்ல.அவர்கள் எல்லாம் தெரிந்து தான் செய்கிறார்கள். எஞ்சிய வாழ்வை தாயும் மகனும் சில பதர்களின் பேச்சைக் கேட்டு பாழாக்கிவிடக் கூடாது.ஆனால் இறுதியில் அது தான் நடக்கும். புலிகளின் சர்வாதிகார சதி வேலைகளால் திமுக பெரும் இன்னல் பட்டது;ஆட்சியை இழந்தது;பழியை சுமந்தது. அதனால் தமிழக அரசியலே சிலகாலம் வீழ்ந்து பட்டது; வீணர்கள் கையில் சிக்கியது.லட்சோப லட்சம் தொண்டர்களின் உயிரினும் மேலான திமுக தலைவர் கலைஞர் பெரும் இழிவை எதிர் கொண்டார். இன்றும் கூட கிளப் ஹவுஸ் எனும் குப்பை மேட்டில் நாடு கடந்த புலி ஆதரவு ஏதிலிகள் அவருக்கெதிராக ஒலமிட்டுக்கொண்டிருக்கிறன. ஆக வலியறிந்த உண்மைத் திமுக தொண்டன் ஒரு போதும் புலி ஆதரவு நிலையை எடுக்க மாட்டான். எடுக்கவும் கூடாது.
மீண்டும் சட்டசிக்கலா?
சாய் லட்சுமிகாந்த்: பேரறிவாளன் தற்போது விடுதலையானது முழுக்க முழுக்க கருணை அடிப்படையில் தான். அவர் குற்றவாளி இல்லை என்று எங்குமே நிரூபிக்கப்படவில்லை. குற்றமற்றவர் என்று உளப்பூர்வமாக நம்பினாலும் சட்டத்தின் முன் அவர் குற்றவாளியே.
தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளவரை திரும்பவும் சட்ட போராட்டத்தில் சிக்க வைக்கும் முயற்சியா?! அல்லது திமுக அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க இந்த உணர்வாளர்கள் முயல்கிறார்களா?!
சாந்தி நாராயணன்: பேரறிவாளன் கையில் பிரபாகரன் படத்தை கொடுத்து இடம் பொருள் ஏவல் தெரியாத மூடத்தனத்தை நடத்தியிருக்கிறார்கள் சிலர் ..
எழுவரில் பேரறிவாளன் தவிர்த்து எஞ்சியோர் விடுதலை கனவில் தங்கள் பங்குக்கு மண்ணள்ளிப் போடுவதை இனி அற்புதம்மாளும் பேரறிவாளனுமே செய்வார்கள் போலிருக்கிறது
தவிர்க்க முடியாத நிகழ்வு
கு.ப குப: பேரறிவாளன் தனது விடுதலையையொட்டி தன் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழக முதல்வர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள்,இயக்கங்களின் தலைவர்களை நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.அரசியல் கட்சிகள் தவிர சில சிறு இயக்கங்கள் பல தனி நபர்கள் பேரறிவாளனின் விடுதலைக்காக தமிழகமெங்கும் குரல் கொடுத்துள்ளனர் ; இயக்கம் நடத்தியுள்ளனர்.அறிவு சென்ற முறை கோவை வந்த போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே சந்திக்க முடிந்திருக்கிறது. எனவே பேரறிவாளனின் விடுதலைக்காகப் போராடிய கோவைத் தோழர்களின் தவிர்க்க முடியாத அன்பு வேண்டுகோளையேற்று , நீதிக்காகப் போராடி அதில் வெற்றியும் எட்டிய அற்புதம் அம்மாள் அவர்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள , கோவைத் தோழர்கள் ஒரு கலந்துரையாடலையே ஒழுங்கு செய்திருந்தனர். அறிவு பெரும்பாலும் பார்வையாளர்கள் வரிசையிலேயே அமர்ந்திருந்தார்.கூட்ட முடிவில் பேரறிவாளனைப் பார்க்க, வாழ்த்த நூற்றுக் கணக்கான தோழர்கள் வரிசையில் திரண்டு வர அதில் ஒரே தோழர் மட்டும் காகிதத்தால் சுற்றப் பட்ட பிரபாகரன் படத்தை, ஒரு வினாடியில் பேப்பரைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.அந்த நேரத்தில் அதை நாகரிகம்,மேடை நாகரிகம் கருதி அறிவு வாங்க வேண்டியதாகி விட்டது ; அந்தப்படத்தை வாங்க முடியாது என்று கூறி அங்கு இன்னொரு பிரச்சினையை உருவாக்க முடியாது. பெருமளவில் கூட்டம் கூடுகின்ற இடங்களில் சில நேரங்களில் இத்தகைய சூழல் தவிர்க்க முடியாது.விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற தமிழக அரசியல் கட்சிகளின் பெரும்பாலான பதாகைகளில் பிரபாகரன் படம் இடம் பெறுவது ஒன்றும் ரகசியமல்ல. மற்றபடி திராவிடர் கழகத்துடன் ஒரு பெரியாரியராக வாழ்வைத் துவங்கிய பேரறிவாளன் ஒரு தூய பெரியாரியகராகத் தான் இன்றும் திகழ்கிறார் ; நேற்று நம் காலத்தின் மகத்தான அறிஞர் ,தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற போது கூட எஸ்.வி.ஆருக்கு தந்தை பெரியார் புத்தகங்களையே அன்புடன் வழங்கினார் அறிவு. இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை ; உண்மையும் அறமும் பேரறிவாளனைச் சூழ்ந்து நிற்கும். இவ்வாறு சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.