தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு.. 16 ரயில்கள் ரத்து.. எவையெல்லாம் இயங்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் 16 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகள் தினமும் உச்சத்தில் சென்று வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 13,776 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு புதிய உச்சத்தை எட்டியது. கொரோனாவுக்கு மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் முழு ஊரடங்கு
கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தமிழக அரசு சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு இந்த வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

எவற்றுக்கு தடை?
அதன்படி சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்று இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதி கிடையாது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது.

எவற்றுக்கு அனுமதி?
அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தொடர்புடைய பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஸ்கள் ஓடாது
சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். முழு ஊரடங்கு நாளில் திருமண விழாக்களில்100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி உண்டு. அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவைக்கும், ஆட்டோ, டாக்சி சேவைக்கு அனுமதி கிடையாது.

அடையாள அட்டை கட்டாயம்
எனினும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆட்டோ, டாக்சியை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் பயணம் தொடர்பான டிக்கெட்டை வைத்து இருந்தால்தான் அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள் அதற்குரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். ஊரடங்கை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16 ரயில்கள் ரத்து
இந்த நிலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு நாளையும், தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 2-ம் தேதியும் 16 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை - புதுச்சேரி, திருச்சி - கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாளை ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications