தொடரும் விஷவாயு பலி.. ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் பலி.. விபரீதம்
சென்னை: ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கழிவு நீர் தொட்டி, பாதாள சாக்கடை போன்றவற்றை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், செலவு குறைவு என்கிற காரணத்தால் மனிதர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் நிலை நீடித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் பதிவாகின்றன.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம், அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முயன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது முதல் இடத்திற்கு வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பல நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளை தூய்மை செய்வதற்கான இயந்திரங்கள் இல்லாததால் சில நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் கூட விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த உயிரிழப்புகளின் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் மற்றொரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்ய, தொட்டியை திறந்த போது விஷவாயு தாக்கி சுரேஷ் என்ற தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். அதேபோல மற்றொரு பணியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், ஆவடியில் இதேபோல கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது 2 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications