245 பேருக்கு உடனே வேலை.. சக்சஸ் முகாம்.. மாற்றுத்திறனாளிக்கு தனி டவுன்ஷிப்.. ஸ்டாலின் செம!
கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை தரும் அரசு இது. ஆகவேதான் அந்தத் துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
வெறும் அரசின் உதவியை மட்டுமே அவர்கள் நம்பி வாழக் கூடாது. சுயமாகச் சொந்தக் காலில் நின்று அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என இந்த திராவிட மாடல் அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கலைஞர் 100 விழாவையொட்டி கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியே ஒரு வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் தயார் நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் செஷயர் ஹோம்ஸ் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தினர்.
இந்த வேலைவாய்ப்பு முகம் மூலம் சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, "350க்கும் மேலான மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இதுவரைப் பெறப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலும் பலர் வீடு கேட்கிறார்கள். அதைவிட்டால் பட்டா வழங்கக்கோரிக் கேட்கிறார்கள். அதிகபட்சமாக வேலை கேட்கிறார்கள்.
அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 110 வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதைப்போன்று 140 பேருக்குப் பட்டா வழங்கி இருக்கிறோம். வெறும் இடத்திற்கான பட்டா மட்டும் வழங்காமல், அவர்களுக்காக ஒரு டவுன்ஷிப் ஒன்றை டெவலப் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
மாற்றுத்திறனாளிகள் வீடு கட்ட அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2.1 லட்சம் அரசு மானியம் அளித்து வருவதை இங்கே சுட்டிக்கட்ட விரும்புகிறேன். அத்திட்டத்தின் கீழ் பலருக்கும் நாம் வீடு கட்ட விண்ணப்பித்துள்ளோம். விரைவில் இன்னும் பலர் வீடு பெற உள்ளனர்.

மானியம் போக உள்ள தொகைக்கு சிஎஸ்ஆர் உதவியை நாட உள்ளோம். அதைக் கொண்டு தமிழ்நாட்டிலேயே ஒரு மாடல் டவுன்ஷிப் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். இந்த டவுன்ஷிப் சக்கர நாற்காலியில் வாழ்க்கை நடத்தும் மாற்றுத்திறனாளி 140 பேருக்காக உருவாக இருக்கிறது.
தமிழக அரசு அவர்களுக்கு ஏற்கெனவே உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனாலும், அவர்களுக்கு என்று ஒரு வேலை இருந்தால் தைரியமாக அவர்கள் வாழ்வை எதிர்கொள்வார்கள். அதை மனதில் கொண்டு இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்தினோம். இதில் 40க்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த முகாம் வழக்கமான வேலை வாய்ப்பு முகாம் போல் நடத்தவில்லை. ஒவ்வொரு மாற்றுத்திறனாளி பற்றிய விவரங்களைச் சேகரித்து, தனியார் நிறுவனங்கள் எந்த மாதிரியான ஆட்களைப் பணி அமர்த்த முடியும் என்பதைக் கலந்தாலோசித்துச் செய்தோம். அதனால் 250 பேருக்கு தற்போது வேலை கிடைத்துள்ளது.

600 பேர் பதிவு செய்திருந்தார்கள். அதில் 245 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போக அரசின் வாழ்ந்து காட்டுவோம், சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்களின் உதவியோடு இவர்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் விளக்கம் அளித்தோம்" என்கிறார்.
இந்த முகாமின் முக்கிய பங்கு வகித்த செஷயர் ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தனலட்சுமி கோவிந்தராஜன், "மாற்றுத்திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகம் ஒன்றை நடத்தினோம். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் ஆகிய இரண்டுடன் இணைந்து நடத்தினோம்.
நாங்கள் இந்த முகாம் மூலம் தேர்வு செய்த 40% ஆட்கள் தற்போது வேலைக்குச் சென்றுகொண்டுள்ளனர். மேலும் 245 நிறுவனங்களில் பணிபுரிவதற்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி வழங்குவதற்கான நடைமுறை வேலைகள் நடந்துவருகின்றன.

இந்த முகாமில் வேலை கிடைத்த மாற்றுத்திறனாளி கார்த்திக் என்பவர் தனியார் மருத்துவமனையில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்துவருகிறார். அதைப்போன்று பகவதி ராஜா என்பவர், ஒரு வேளாண்மை சார்ந்த தனியார் நிறுவனத்தில் அலுவலக அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
ஜெசிந்தா என்பவர் நிதி ஆலோசகராக ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா லைஃப் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த முகாம் மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மூலமான விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம். அரசு வேலை மட்டுமே என்று நம்பாமல், தனியார் துறைகளிலும் உங்களால் பலவேறு வேலைகளைச் செய்யமுடியும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறோம். அவர்களும் அதை உணர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல முன்னேற்றம்" என்கிறார்.
இந்த முகாமில் வங்கி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், அமேசான் சில்லறை வணிகம் ஆகியவை கலந்துகொண்டன.

மாற்றுத்திறனாளிகளுக்காக 70 சக்கரநாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்களை அதில் உட்கார அழைத்து வரத் தன்னார்வலர் பலர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும் வாகன வசதிகள்கூட செய்து தரப்பட்டது. சாதாரணமாக 9 வகுப்பு முதல் பிஹெச்டி வரை படித்தவர்கள் இதில் பங்கேற்றனர்.
இம்முகாம் மூலம் வேலை பெற்ற மாற்றுத்திறனாளி பகவதி ராஜா, "நான் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். நான் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து இந்த முகாமில் கலந்துகொண்டேன். இப்போது எனக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது.
பொதுவாக மாற்றுத்திறனாளியாக வேலைத்தேடிப் போனால், தரமாட்டார்கள். இங்கே எங்களுக்காகவே முகாம் நடந்தது பெரிய சந்தோஷம்" எனச் சொல்லும் இவருக்குச் சரளமாகப் பேச வராது. அதேபோல் மிகவும் குட்டையானவர். ஆகவே வேலை கிடைப்பதில் சிக்கல் இருந்துள்ளது. அந்தக் கவலையை இந்த முகாம் முற்றாகத் துடைத்து எரித்துள்ளது.
ஜெசிந்தா மேரி, "நான் கடந்த 15 வருடங்களாக ஹெச்.ஆர் ஆக வேலை செய்து வந்தேன். நான் பொறியியல் படித்திருக்கிறேன். மூன்றரை வருடங்கள் முன்பாக எனக்குப் பக்கவாதம் வந்துவிட்டது. அதனால் மூன்று மாதங்கள் வரை கோமா நிலையிலிருந்தேன். பேசவே முடியாமல் படுத்தப்படுக்கையாகக் கிடந்தேன். கை, கால் வராமல் போய் விட்டது.

எனது வாழ்க்கையையே முடிந்துவிட்டது என நினைத்தேன். அப்போதுதான் சேஷா ஹோம்ஸ் நடத்துகின்ற வேலைவாய்ப்பு முகம் பற்றித் தெரிந்து வந்து கலந்துகொண்டேன். இப்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா லைஃப் இல் நிதி ஆலோசகராக இப்போது வேலை கிடைத்துள்ளது.
இந்த வேலை மூலம் எனக்கு மறுவாழ்வு அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் நன்றி" என்கிறார்
கோயமுத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரான ஜெகதீசன், "இந்தத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் அமைச்சர். அவரின் நேரடி கவனிப்பில்தான் மாற்றுத்திறனாளிகள் துறையானது மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது" என்கிறார்.
இவர்களைப் போன்று இதே மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சில சிறந்த தொழில் முனைவோராக மாறி உள்ளனர். அதற்கு உதாரணம் விவேக் குமார். இவர் போலியோ பாதிப்பால் நடக்கமுடியாமல் போனவர்.
பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பின் தொழிற்கல்வி கற்றார். அதன் பிறகு தனியார் நிறுவனத்தில் பணி. பிறகு சொந்தமாகக் கடன் பெற்று பேனல் போர்டு தயாரிப்பு தொழில் தொடங்கினார்.

வெளியில் கடன் பெற்றதால் அதிக வட்டிச் சுமையை இவரால் தாங்க முடியவில்லை. ஆகவே அரசு உதவியுடன் இப்போது வட்டி இல்லாமல் 3 லட்சம் கடன்பெற்று தொழிலை மேம்படுத்தினார். நல்ல வருவாய் கிடைத்ததால், 3 ஆண்டுகளில் அந்தக் கடனை முழுதாக திரும்பச் செலுத்திவிட்டார்.
அதன் பிறகு மேலும் தொழிலை வலுவாக்க 15 லட்சம் கடன்பெற்று அதன்மூலம் 'டச் ஆன் கண்ட்ரோல்' கம்பெனியின் பெரிய முதலாளி ஆகியிருக்கிறார் விவேக்.
மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மாற்றம் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications