என்னதான் ஆச்சு பள்ளிக் கல்வித் துறைக்கு? திமுக எம்எல்ஏவுக்கு மாலை கிரீடம்..நடனமாடி பூ தூவிய மாணவிகள்
சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம், மதுரை புத்தகத் திருவிழாவில் சாமி வந்து ஆடிய மாணவிகள் என பள்ளிக்கல்வித்துறை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருவது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏவுக்கு மாலை கிரீடம் அணிவித்து மாணவிகள் சுற்றி நின்று நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் கண்டனம் வலுத்து வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு பேசிய பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறி அவர்களை மூளைச்சலவை செய்வது போல் பேசியதாக கடும் கண்டனங்கள் வலுத்தது. மேலும் பாவ புண்ணியத்தின் அடிப்படையில் தான் இந்த பிறவியில் மாற்றுத்திறனாளிகள் பிறந்திருக்கிறார்கள் என்று அவரது பேச்சு அவரை சிறையில் தள்ளி இருக்கிறது.
அரசு பள்ளியில் இது போன்ற நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது யார்? என கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் திமுகவினரே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக கருத்துக் கூறி வந்தனர். மேலும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த புத்தகத் திருவிழாவிலும் சர்ச்சை வெடித்தது. புத்தகத் திருவிழாவுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், கருப்புசாமி பாடல் ஒலித்த போது அங்கு கருப்புசாமி வேடம் தரித்த ஒருவர் கையில் அரிவாளுடன் ஆவேசமாக மேடையில் இறங்கி வந்து நடனம் ஆடினார். இதனால் அங்கிருந்த மாணவிகள் திடீரென அருள் வந்தது போல ஆவேசமாக ஆடத் தொடங்கினர்.
30க்கும் மேற்பட்டோர் சாமி வந்து ஆடத் தொடங்கி மயக்கம் அடைந்த நிலையில் சக மாணவிகள் அவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும் கல்வியாளர்களும் புத்தகத் திருவிழாவில் எதற்கு சாமி பாட்டு போட்டீர்கள் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் விளக்கம் அளித்த நிலையில் இந்த விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது. பள்ளியின் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்எல்ஏவுக்கு மாலை கிரீடம் அணிவித்து அவரை சுற்றி நின்று மாணவ மாணவிகள் நடனமாடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. சென்னை திருவொற்றியூரில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் கலந்து கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சி நடந்த மேடையில் மாணவிகள், மாணவர்கள் கேபி சங்கருக்கு மாலை கிரீடம் அணிவித்து விஜயகாந்த் பாடலுக்கு நடனமாடினர். மேலும் அவருக்கு பூத்தூவி திரைப்படங்களை வருவது போல பில்டப் கொடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் நிலையில் ஒரு அரசியல்வாதியை சுற்றி நின்று மாணவ மாணவிகளை எப்படி நடனம் ஆட வைக்கலாம்? பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு நடத்துவதும் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வதும் தவறு என கூறும் திமுகவினர் மாணவ மாணவிகளை எம்.எல்.ஏ முன் மட்டும் ஆட வைக்கலாமா என பாஜகவினர்ர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இந்த வீடியோவை வெளியிட்டு அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications