தாம்பரம் மேடவாக்கத்தில் மோசமான சாலையால் கவிழ்ந்த ஆட்டோ.. மறுபக்கம் கால்வாயில் விழுந்த ஆட்டோ
சென்னை: தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் , தேங்கி நின்ற மழைநீரில், மூன்று சக்கர ஆட்டோ கவிழ்ந்து விழுந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனிடையே மேடவாக்கம் அருகே மற்றொரு பயணிகள் ஆட்டோ கால்வாயில் விழுந்தது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. பல இடங்களில் நீர் தேங்கியது, இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில், மூன்று சக்கர ஆட்டோ கவிழ்ந்து விழுந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

மேடவாக்கம், விஜிபி பாபுநகர் பகுதியில் கன மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி நின்றிருந்தது. அதில் மழை நீர் தேக்கம் காரணமாக சாலையில் இருக்கும் மேடு பள்ளம் யாருக்கும் தெரியவில்லை . இந்நிலையில், அவ்வழியே மூன்று சக்கர ஆட்டோவில், விற்பனைக்காக பூண்டு பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வந்த பூண்டு வியாபாரி சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக ஆட்டோ மழை நீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கினார். இதில், ஆட்டோவில் ஏற்றி வந்த பூண்டு பெட்டிகள் மழை நீரில் விழுந்தன.
இந்த விபத்தில் , கீழே விழந்த ஆட்டோ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை ஓடிச் சென்று மீட்க உதவி செய்தனர். அதே போல், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும், பள்ளத்தில் சிக்கி கீழே அடுத்தடுத்து விழுந்தனர். பள்ளிக்கு குழந்தையுடன் சென்ற பெண் பள்ளத்தில் தவறிவிழுந்தார். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே, சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி, பள்ளத்தை மூடி உடனடியாக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்
இதனிடையே சென்னை மேடவாக்கம் அடுத்த அரசன்கழனியில் உள்ள மழைநீர் கால்வாயில் ஆட்டோ தவறி விழுந்தது. ஓட்டுநர் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கால்வாயின் ஒரு பகுதி திறந்துவைக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மேடவாக்கத்தில் சாலைகள் பயணிக்கவே லாயக்கற்ற வகையில் தான் இருந்தன. இந்நிலையில் கனமழை காரணமாக மேடவாக்கத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிக மோசமாக சேதம் அடைந்து தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதுதவிர மேடவாக்கம் பெரும்பாக்கம் கோவில்பாக்கம் அனைத்து பகுதிகளிலும் சாலை என்பதே கிடையாது..ஒவ்வொரு மழைகாலத்திலும் கழிவுநீர் கலந்த இப்பகுதிகளின் ஏரி நீர் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது ஒருபுறம் எனில், மேடவாக்கம் கூட்டுச்சாலை, கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை பயணம் படுமோசமானதாகவும் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கனமழையின் நீட்சி தொடர்ந்தால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மேடவாக்கம், பெரும்பாக்கம், மடிப்பாக்கம் , கோவிலம்பாக்கம் பகுதிகளில் வெள்ளநீர் வடிகால்களை அமைத்து, சாலைகளை தரமாக அமைத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications