சென்னையில் ஷாக்! வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டிராபிக் போலீஸ்.. மர்மநபர் வெறிச்செயல்
சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியுள்ளது
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரை அடையாளம் தெரியாத கார் ஒன்று வேகமாக மோதிவிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வாகன திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை குறைக்கவும் காவல்துறையினர் இரவு நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிய போக்குவரத்து காவல்துறையினர் மற்றொருபுறம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குற்ற சம்பவங்களும், போக்குவரத்து விதி மீறல் சம்பவங்களும் பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவ்வளவு பாதுகாப்புகளை மீறியும் குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே காவல்துறையினரும் கூடுதல் தணிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவரை அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை
ராயப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே இரும்பு தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 'ஷிப்ட்' ரக கார் ஒன்று வேகமாக வந்திருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த உதவி ஆய்வாளர்கள் மோகன், இளங்கோவன் மற்றும் அவருடன் காவலர் ஜெயக்குமார் ஆகியோர் நின்றிருக்கின்றனர். ஆனால் கார் வேகம் குறையாமல் வந்ததையடுத்து உதவி ஆய்வாளர்கள் இருவரும் விலகிக்கொள்ள, காவலர் ஜெயக்குமார் மட்டும் குறுக்கே நின்றிருக்கிறார். காரை ஓட்டி வந்த நபர் இதனை கவனித்த பின்னரும் காரை நிறுத்தாமல் வேகத்தை அதிகரித்திருக்கிறார்.

வேகமாக வந்த கார்
இதில் கார் காவலர் ஜெயக்குமார் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. மோதிய வேகத்தில் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து மற்ற காவலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். ஜெய்குமார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் காயம் பலமாக இருந்ததால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தையடுத்து கார் யாருடையது? அதை ஓட்டி வந்தது யார்? போன்ற விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல விபத்து நடந்த பகுதியை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமிராக்கள் இருந்தபோதும் விபத்து ஏற்படுத்தி காரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள காவல்துறை சிசிடிவி கேமிராக்கள் பழுதடைந்துள்ளதால் காரின் நம்பர் பிளேட்டை அடையாளம் காண முடியவில்லை என சொல்லப்படுகிறது. எனவே காவல்துறையினர் அருகில் உள்ள கட்டிடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய தொடங்கியுள்ளனர். வாகன தணிக்கையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல.

இதேபோல
இரு தினங்களுக்கு முன்னர் சென்னை கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பிரசன்ன வெங்கடேசனை காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த வாக்குவாதத்தையடுத்து கோபமடைந்த பிரசன்ன வெங்கடேசன், எஸ்ஐ பிரபாகரன் முகத்தில் வேகமாக குத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறிய பிரபாகரனை உதவிக்கு இருந்த போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கைது
இதனையடுத்து பிரசன்னா மீது கொலை முயற்சி, வேலையை செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு சில நாட்களில் போக்குவரத்து காவலர் மீது கார் மோதியிருப்பது சென்னை காவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications