DMK Alliance: இனிமேதான் டிவிஸ்ட்டே ஆரம்பம்.. 2 கட்சிகள் வெளியேற ரெடி.. சமாளிக்குமா திமுக?
Recommended Video
சென்னை: திமுக கூட்டணியில் ஒரு திடீர் சலசலப்பு ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தே திமுக கூட்டணி வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் இதையும் சமாளிக்கும் வகையிலேயே அதன் உத்திகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் காலில் வெந்நீரை ஊற்றியது போல பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் இணைந்து போட்டியிடப் போகிறது என்பதை தவிர பிற கட்சிகள் எல்லாம் யார் யாருடன் என்பதெல்லாம் பின்வாசலில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளாகவே உள்ளன.
இதில் அதிமுக அணியில் பாஜக, தேமுதிக, பாமக அதோடு இன்னும் ஒரு சில கட்சிகளும் திமுக அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இணையலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கேற்றாற்போல இந்த கட்சிகளும் பேசிக்கொண்டு இருப்பது இதை ஊர்ஜிதப் படுத்துகிறது. இப்படி அணிகள் அமைவதற்கு 90% வாய்ப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ட்விஸ்ட் ஏற்படப் போகிறது என்கிறது கட்சி வட்டாரங்கள்.
சம்பவம் 01
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சி திடீரென்று தமிழகத் தலைமையை மாற்றியது. அதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருந்ததாக கூறப்பட்டது. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது சாதிப் பாசத்தின் காரணமாக தினகரனோடு கூட்டணி சேரலாம் என்று வலியுறுத்தி வந்ததாலேயே திமுக திடீரென்று ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று முழக்கமிட்டு தங்களோடு காங்கிரஸ் இருக்கிறது என்று காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் பதவி பறிக்கப் பட்டபிறகு இன்னமும் திருநாவுக்கரசர் வேறு சில காய்களை நகர்த்தி வருவதாகவே இன்னமும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவம் 02
திருநாவுக்கரசரின் வீட்டிற்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக ரஜினிகாந்த் வந்துள்ளார். அப்போது அங்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அங்கே இருந்துள்ளார். அப்போது மூவரும் கலந்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் கூறினார். ஆனால் பக்காவாக பேசி முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
சம்பவம் 03
இந்த நிலையில் திமுக அணியில் எங்களை அழைத்துப் பேசுவார்கள் என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் விசிகவின் பொது செயலாளர் வன்னி அரசு வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டு சேர்ந்து களமாடும் போது உடன் இருப்பவர்களையும் மதிக்காமல், தங்களுடைய வலிமை என்னவென்றும் தெரியாமல், தாங்கள் எதிரணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என்று ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாவே வீழ்ந்து விடுவார்கள் என்று பொருள்வரும்படியான திருக்குறளையும் அதற்கு கருணாநிதி எழுதியிருந்த விளக்கவுரையையும் பதிவிட்டு இருந்தார். ஆக விசிக வுக்கு திமுகவில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பது தெளிவானது. அதோடு விசிக தங்களது அணியில் இருப்பதையும் திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் 04
இந்த நிலையில் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாங்கள் திமுக அணியில்தான் இருக்கிறோம் எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதை ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது, தலைவர்கள்தான் முடிவு செய்ய முடியும் என்று பேசியவர் முத்தாய்ப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்மானமிக்க கட்சி எந்த சூழலிலும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி முடித்தார். இது குறித்து இ.கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறும்போது திமுக கூட்டணியில் எங்களுக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் என்பதையே அவர் அவ்வாறு கூறினார் என்றும் அதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் அதே வேளையில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படலாம் என்ற நிலையம் நிலவுகிறதாம். இதனாலேயே முத்தரசன் அப்படி பேசியதாக் கூறப்படுகிறது.
சீனுக்கு வரும் தினகரன்
இந்த 4 தரமான சம்பவங்களும் அரங்கேறியுள்ள நிலையில் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது போல தினகரன் வரலாம் என்று கூறப்படுகிறது. சிங்கிள் சிங்கமாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினகரன் இப்போது இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக திரட்டி விஸ்வரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏற்கனவே திருநாவுக்கரசர் விரும்பியபடி காங்கிரஸ் கூட்டணியில் தினகரன், விசிக என்று போடப்பட்ட பிளான் இப்போது அப்படியே உல்டாவாகி, விசிக, இ.கம்யூனிஸ்ட், அமமுக, இவர்களோடு ஜி.கே வாசனின் த.மா.கா போன்ற கட்சிகள் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.
என்ன பாதிப்பு வரும்
இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக வாக்குகள் பிளவுபடும். தலித் வாக்குகள், தினகரனுக்கு உள்ள அதிமுக வாக்குள் கணிசமாக பிரியும். பிரியும் வாக்குகளால் நிச்சயம் அதிமுகவுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் அதேசமயம், திமுகவுக்கும் லாபம் தராது. அதாவது திமுகவுக்கு பெருத்த அடி விழும் வாய்ப்பு ஏற்படும். இதுதான் இந்த 3வது அணியின் நோக்கமாக கருதப்படுகிறது. எனவே இதை தவிர்க்க திமுக முயலுமா என்பது எதிர்பார்ப்புக்குரியது. அதேசமயம், தினகரன் இந்த சான்ஸை விட மாட்டார்.. தனது செல்வாக்கை நிரூபிக்க இதை விட சிறந்த லட்டு அவருக்குக் கிடைக்காது என்பதால் புதிய அணியை உருவாக்கி ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு நெருக்கடி தர அவர் முயல்வார் என்றே கூறப்படுகிறது.