எடப்பாடி வரும் நேரம் பார்த்து.. திடீரென வீட்டில் புகுந்த மர்ம நபர்.. விரட்டி பிடித்த போலீஸ்! பரபர
சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குள் திடீரென மர்ம நபர் ஒருவர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.. சேலம் மாவட்டம் எடப்பாடியில் இவர் வசித்து வந்தாலும், சென்னையிலும் இவருக்குப் பசுமை வழிச்சாலையில் வீடு இருக்கிறது. சென்னைக்கு வரும் போதெல்லாம் இங்கே தான் அவர் தங்குவார்.

மேலும், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் எல்லாம் இங்கே தான் நடக்கும் என்பதால் தினசரி பலர் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்க இந்த இடத்திற்கு வருவார்கள். அவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். இதற்கிடையே இன்றைய தினம் நடந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பரபரப்பைக் கிளப்பியது.
மர்ம நபர்: அதாவது இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளச் சென்றிருந்தார். சட்டசபை நிகழ்வுகளை முடித்துக்கொண்டு வழக்கம் போல அவர் தனது காரில் வீடு திரும்பினார். வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந்த நிலையில், இதற்காகக் காத்திருந்த அந்த மர்ம நபர் காருடன் வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளார்.
பரபரப்பு: இதைப் பார்த்ததும் பதறிய எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்த மர்ம நபரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் அவர் எதற்காக இப்படி திடீரென எடப்பாடி வீட்டிற்குள் நுழைய முயன்றார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடும் தாக்கு: முன்னதாக தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த அவர், "இந்த வேளாண் பட்ஜெட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்கள் கரும்பு டன்னுக்கு ரூ.4000 தருகிறோம் என்றார்கள்.. ஆனால் இதுவரை அப்படி எதையும் தரவில்லை. தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்குத் தந்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கூட குறுவை சாகுபடி சேர்க்கப்படவில்லை. இந்தாண்டு குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அறிவிப்பார்கள் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டில் அது கூட அறிவிக்கவில்லை. இது வேதனையளிக்கிறது. பாதிப்புக்குள்ளான விளைநிலங்களைச் சரி செய்யவும் நடவடிக்கை தேவை..
அதேபோல இந்த பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு முறையாகப் பெறாததால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் ரூ.35,000 இழப்பீடு தர வேண்டும்" என்று காட்டமாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications