கங்குவா - வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.. புடிக்கலைனா புடிக்கலனு சொல்லுங்க.. குரல் கொடுத்த கூல் சுரேஷ்
சென்னை: சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கங்குவா என்ற சப்தம் தான் கேட்கிறது. படம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறலாம் ஆனால் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. மற்ற மாநிலங்களின் படங்களைக் கொண்டாடும் நாம், நம் ஊர்க்காரரை மிகவும் இழிவுபடுத்தி பேசுகிறோம் என்று நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் சூர்யாவின் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை தற்போது மற்றும் 1070களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் படம் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சமூக வலைதளங்களைத் திறந்தாலே கங்குவா திரைப்படம் குறித்து பொதுமக்கள் புலம்பும் மற்றும் திட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமாக உள்ளது. சூர்யாவையும், படக் குழுவினரையும் பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். கங்குவா படத்தில் கத்திக் கொண்டே இருக்கின்றனர். எதற்கு கத்துகின்றனர் என்றே தெரியவில்லை. கார்த்தி வரும் காட்சிகளை மட்டும் இரண்டு நிமிடங்கள் பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர்,
படத்தின் இரைச்சல் குறித்து பலரும் எதிர்மறையாக கூறியதால் சப்தத்தை குறைக்கும் முடிவை படக் குழுவினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கங்குவா தொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் பரவி வருகிறது. இந்நிலையில், படம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறலாம் ஆனால் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என்று நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கங்குவா, கங்குவா என்ற சப்தம் தான் அனைத்து சமூக வலைதளங்களிலும் கேட்டுக் கொண்டு இருக்கிறது. கங்குவா படம் எடுத்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகரை மிகவும் கேவலமாகப் பேசுகின்றனர். இந்தப் படம் நல்லபடியாக வரும் என்று எண்ணிதான் ஞானவேல்ராஜா, சிறுத்தை சிவா, சூர்யா ஆகியோர் பணியாற்றி இருப்பார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றனர்.
கங்குவா படம் பிடித்திருக்கிறது என்றால் பிடித்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு வாய்க்கு வந்தவற்றை எல்லாம் பேசக் கூடாது. இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதால் சிவா, சூர்யா, ஞானவேல்ராஜா ஆகியோரது குடும்பத்தினருக்கு எதாவது ஆகிவிட்டது என்றால் யார் பொறுப்பு.
தயவுசெய்து யாரையும் இழிவுபடுத்தி பேசாதீர்கள். இதன் மூலம் நம்முடைய குணம் என்னவென்பது வெளிப்படும். மற்ற மாநிலங்கள், நாடுகளில் இருந்து நம்மை பார்க்கின்றனர். கங்குவா படம் ஒரு புது முயற்சி. ஹாலிவுட் தரத்தில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பார்கள். இப்படி இழிவுபடுத்திக் கொண்டே இருந்தால் தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளப் படம் ஓடிக் கொண்டே தான் இருக்கும், கொடிகட்டிப் பறக்கத்தான் செய்யும்.
நம்ம ஊருக்காரனுக்கே நாம் சப்போர்ட் பண்ணவில்லை என்றால் யார் செய்வார்கள். உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் என் குழந்தை பெரியாளாக வருவான் என்றுதான் பேசுவீர்கள். அதுபோலத்தான் தயாரிப்பாளரும் தனது படத்தைப் பற்றி பேசியுள்ளார். பல கோடி போட்டு எடுத்துள்ளதால் அப்படி கூறியிருக்கிறார். சூர்யா பேசும்போது கூட வாயைப் பொழந்து பார்ப்பார்கள் என்று கூறினார்.
தவறு நடப்பது சகஜம்தான். படத்தின் சப்தம் அதிகமாகத்தான் உள்ளது. அதனை மாற்றியமைத்து விட்டார்கள். மற்ற மாநிலங்கள் நம்மை இழிவாகப் பார்க்கும் வகையில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது மன வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications