ஐயா.. பெருங்குரலெடுத்து கத்திய பெண்.. சட்டென காரை நிறுத்திய ஸ்டாலின்.. அடுத்து நடந்த மாஸ் சம்பவம்!
சென்னை: நேற்று சென்னையில் காமராஜர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் செல்கையில் பெண் ஒருவர் பெருங்குரலெடுத்து கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சத்யா. இவரின் கணவர் ராஜா. இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் மன வாழ்க்கை நன்றாகவே சென்று இருக்கிறது. இந்த நிலையில்தான் இவர்களுக்கு தீனா என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளார்.

பெண் குடும்பம்
குழந்தை பிறந்த சில மாதங்களில் இருவருக்கும் இடையில் சண்டை வந்துள்ளது. சத்யாவை ராஜா கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார். அவ்வப்போது மோசமாக தாக்கி அடிக்க தொடங்கி உள்ளார். ராஜாவின் அம்மா சுலோச்சனா மகனை தட்டிக்கேட்டு இருக்கிறார். வீட்டிற்கு வந்த பெண்ணை இப்படி அடிக்கிறியே அவ என்ன தப்பு செஞ்சா என்று மகனை சுலோச்சனா தட்டிக்கேட்டு இருக்கிறார்.

சண்டை
ஆனால் ராஜா அடங்காமல் மனைவியை தொடர்ந்து கொடுமை படுத்தி உள்ளார். அதோடு விடாமல் வேறு ஒரு பெண்ணுடனும் சேர்ந்து வாழ தொடங்கி உள்ளார். வேறு பெண் ஒருவருடன் சேர்ந்து ராஜா தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். மேலும் தனது பெண் குழந்தை தீனாவை ராஜா தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். நீ வேண்டுமானால் வேறு பெண்களுடன் வாழ்ந்து கொள். ஆனால் என் மகளை என்னிடம் திருப்பி கொடு என்று சத்யா கேட்டு இருக்கிறார்.

கணவன் மனைவி
ஆனால் சத்யா குழந்தையை திருப்பி கேட்ட போதெல்லாம் அவரை அடித்து உதைத்து மிரட்டி உள்ளார் ராஜா. குழந்தை எல்லாம் கிடையாது. என் வீட்டை விட்டு வெளியே போ என்று மிரட்டி உள்ளார். ஆனால் சுலோச்சனா தன் மகன் ராஜாவை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு மருமகள் சத்யாவை வீட்டில் கவனித்து வந்துள்ளார். என் மருமகள் மீது தப்பு இல்லை என்று கூறி சத்யாவிற்கு ஆதரவாக சுலோச்சனா இருந்துள்ளார்.

என்ன ஆச்சு?
மாமியார் சுலோச்சனா திமுக நிர்வாகி. அவர் சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக பலியாகிவிட்டார். சுலோச்சனாவின் கணவரும் பலியாகிவிட்டார். இருவரும் இறந்ததை பயன்படுத்தி மீண்டும் ராஜா வீட்டிற்கு வந்துள்ளார். இது என் அப்பா, அம்மா வீடு, நீ வீட்டை விட்டு வெளியே போ என்று ராஜா சத்யாவை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். அதோடு வேறு பெண்ணுடன் அந்த வீட்டில் வசிக்க தொடங்கி உள்ளார்.

மனு
இதையடுத்து வேறு வழி இல்லாமல் நேற்று அந்த பெண் முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக முறையிட்டார். முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் நேற்று காமராஜர் சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த அந்த பெண் ஐயா என்று பெருங்குரலெடுத்து கத்தினார். இதனால் அங்கு இருந்த அதிகாரிகளும் முதல்வர் ஸ்டாலினும் திரும்பி பார்த்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்ணை வர சொன்னார். அந்த பெண்ணிடம் என்ன ஆச்சு என்று கேட்டார். அவர் விளக்கி சொன்ன பின் அவரிடம் மனுவை வாங்கினார். அந்த மனுவை உதவியாளரிடம் கொடுத்து, அதில் உடனே மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு அந்த குழந்தையை மீட்டு தாயிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications