ஆபாச பேச்சு.. பாலியல் சீண்டல்! சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு கொடுமை! ஒருவர் கைது
சென்னை: சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில், வேலை, மருத்துவம், கல்வி, பயணம் என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம் இவர்கள் அனைவருக்கும் ஏற்ப கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். குறிப்பாக சாலை போக்குவரத்து வசதிகள் கூடுதலாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுகின்றன.

பொதுப்போக்குவரத்து வசதி பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் மறுபுறம் தனியார் போக்குவரத்து சேவைகள் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. ஆட்டோ, கார் டாக்ஸிகள் அதிகரித்திருந்தாலும், போக்குவரத்திற்கான தேவை மேலும் அதிகமாக இருப்பதால், பைக் டாக்ஸி சேவை பிறந்தது. சட்டரீதியாக பைக்கை டாக்ஸியாக பயன்படுத்த அனுமதி கிடையாது என்றாலும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி என பல்வேறு இடங்களில் இந்த பைக் டேக்ஸி சேவையானது இயங்கி வருகிறது.
இந்நிலையில் பைக் டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள் சிலர் தொடர்ச்சியாக பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் நேற்றிரவு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, சென்னை சூளைமேட்டிலிருந்து ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு போவதற்கு இளம்பெண் ஒருவர் பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். புக் செய்ததை போல பைக் வந்த நிலையில், இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு பைக் புறப்பட்டிருக்கிறது.
ஆனால் கொஞ்ச தூரம் சென்றவுடன் பைக் ஓட்டுநர், இளம்பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஆபாசமாக பேசுவது, தொட முயற்சிப்பது என தன்னுடைய சில்மிஷத்த ஸ்டார்ட் செய்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத இளம்பெண் தன்னுடைய செல்போனில் இதை அப்படியே வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோவை தனது உறவினர்களுக்கு அனுப்பி நடந்த சம்பவத்தையும் டெக்ஸ்ட் மெசேஜில் விளக்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் அருகே மகளின் வருகைக்காக காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பைக் ஓட்டுநரை அலேக்காக பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் பைக்கை ஓட்டி வந்தது மதுராந்தகத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் பைக்கையும் பறிமுதல் செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பைக் டாக்ஸியில் இளம் பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications