சென்னை மடிப்பாக்கத்தில் வடிவேலு பாணியில் அரிசி கடையில் 'சாம்பிள்' .. ஆடிப்போன ஊழியர்கள்
சென்னை: சென்னை மடிப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் அரிசி வாங்க வந்த டிப்-டாப் ஆசாமி ஒருவர், கல்லாவில் இருந்த நபரிடம் 26 கிலோ எடை கொண்ட 12 அரிசி மூட்டை வேண்டும் என்று கூறி வாங்கியிருக்கிறார். வடிவேலு எப்படி ஒரு கடையில் சாம்பிள் பார்ப்பதற்காக அரிசி வாங்குவரோ, கிட்டத்தட்ட அதே பாணி தான்.. ஆனால் வேறு வடிவில் அரிசி மூட்டைகளை வாங்கினார். கடைசியில் வடிவேலு பாணியிலேயே கம்பி நீட்டினார்.
வடிவேலு ஒரு படத்தில் அரிசி வாங்குவதற்காக கடைகளுக்கு செல்வார். 100 மூட்டை அரிசி வேண்டும் என்று கேட்பார்.. அதன்பிறகு ஒரு மூட்டைக்கு ஒருகிலோ என்று மொத்தம் 100 கிலோ அரிசி சம்பிள் வாங்குவார். அதேபோல் இன்னொரு கடையில் சாம்பிள் வாங்க போவார். அங்கும் இதேபோல் அரிசி வாங்கிவிட்டு தராசு, படிக்கல்லையும் சேர்த்து திருடிவிடுவார். டிப் டாப் உடையில் வந்து திரைப்படத்தில் வடிவேலு செய்யும் செயலை நிஜத்தில் ஒருவர், அதைவிட வித்தியாசமான முறையில் அரிசி கடையில் திருடி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை மடிப்பாக்கம் சபரி சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது. அங்கு ஒரு டிப்-டாப் ஆசாமி அரிசி வாங்க வந்தார். அப்போது கல்லாப்பெட்டியில் இருந்த ஊழியரிடம் வந்த டிப்-டாப் ஆசாமி, தான் புத்தாண்டு பண்டு பிடித்திருப்பதாகவும், அதற்கு அரிசி கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், தனக்கு 26 கிலோ எடை கொண்ட 12 அரிசி மூட்டை வேண்டும் என தெரிவித்தார். ஒரு மூட்டை ரூ.1,810 வீதம் 12 மூட்டைகளுக்கு ரூ.21,720 என கடை ஊழியர் கூறினார்.
அதற்கு அந்த ஆசாமி, பணம் அருகில் உள்ள அலுவலகத்தில் உள்ளதாக கூறினார். அத்துடன் தங்களிடம் ரூ.35 ஆயிரத்துக்கு 100 ரூபாய் நோட்டுகளாக இருப்பதாகவும் அதை வாங்கிக் கொண்டு ரூ.500 நோட்டுகளாக கொடுக்குமாறும் கேட்டிருக்கிறார்.. அரிசியை அலுவலகத்தில் இறக்கி வைத்து விட்டு அரிசிக்கான தொகை போக மீதமுள்ள பணத்தை ரூ.500 நோட்டுகளாக எடுத்து வந்து கொடுக்குமாறும் கேட்டிருக்கிறார்.
அதை நம்பிய ஊழியர்கள் 12 அரிசி மூட்டைகளையும், ரூ.13,280 பணத்தையும் கடையில் வேலை ஊழியர் மூலம் அவர் சொல்லும் இடத்துக்கு எடுத்து சென்றுள்ளார்கள். டிப்-டாப் ஆசாமி, இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் ஏறி வேளச்சேரி நோக்கி சென்று ஒரு இடத்தில் நிறுத்தினார். பின்னர் சூப்பர் மார்க்கெட் ஊழியரிடம் மேலே அலுவலகம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
அங்கே போய் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி அவர்களிடம் இருந்து ரூ.13,280 பணத்தை வாங்கி கொண்டு நைசாக தப்பிச்சென்று விட்டார். இதை கண்டு ஆடிப்போன மடிப்பாக்கம் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளுடன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications