பெருங்களத்தூரில் மின் கம்பியில் பிணமாக தொங்கிய இளைஞர்.. தாம்பரம் இளைஞரின் விபரீத செயல்
சென்னை: தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் குடிபோதையில் மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் அவர் மின்கம்பியில் சிக்கி பிணமாக தொங்கிய புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்த 23 வயதாகும் டேனியல், அந்த பகுதியில் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார். திங்கள்கிழமை அன்று வீட்டில் திடீரென குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டேனியல் கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் தனது நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றுள்ளார்..

பின்னர் இரவு 11 மணி அளவில் டேனியலும், மணிகண்டனும் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தினார்கள். அப்போது மணிகண்டன், டேனியலிடம் நீ வீட்டுக்கு செல்வது தான் நல்லது என அறிவுரை கூறினார். ஆனால் அதை காதில் வாங்காமல் நான் வீட்டுக்கு செல்ல மாட்டேன் செத்தாலும் சாவேன் என கூறி பிடிவாதமாக இருந்துள்ளார்.
டேனியலுக்கு போதை அதிகமாகி நடவடிக்கை சரியில்லாமல் போய் இருக்கிறது. இதை அறிந்த மணிகண்டன் அவரை மாடியில் படுக்க வைப்பதற்காக வீட்டுக்குள் சென்று பாய், தலையணைகளை எடுக்க சென்றார். அந்த நேரத்தில் டேனியல் மாடியில் இருந்து திடீரென தெருவில் உள்ள மின்கம்பிகள் மீது குதித்துள்ளார்.
இதில் மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி அவர் துடிதுடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இதை கண்டு அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனே தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், முடிச்சூர் மின்வாரிய அலுவலகத்துக்கு நடந்தவற்றை கூறி அவர்களை நேரில் வருமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் துடிதுடித்து கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
பின்னர் மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். மின்வாரிய ஊழியர்கள் டேனியல் குதித்ததால் பழுதான மின்கம்பத்தை சீரமைத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அந்த பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தார்கள்.
பெருங்களத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து மின்கம்பத்தின் மீது குதித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்வது கோழைத்தனமானது.தற்கொலை மனநிலை வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.தற்கொலை தடுப்பு எண்களுக்கும் அழைக்கலாம். தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வினை தராது. மாறாக உங்களை நேசிப்போருக்கும் தீராத வலியை மட்டுமே தரும்.












Click it and Unblock the Notifications