மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.. சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்! காவல்துறை அதிரடி
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கஞ்சா உள்பட போதை பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த காவல்துறை மூலம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது. இப்படி இருக்கையில்தான் சென்னை மெட்ரோ ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியிருந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான படத்தை தனது x தளத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெய்சங்கர், "பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர். தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள். கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக தண்டையார்பேட்டையை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுவாக மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இப்படி சோதனை முறைகள் இருந்தும் கஞ்சாவுடன் ரயில் இளைஞரால் எப்படி ஏற முடிந்தது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல்துறையும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஏராளமான அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் கஞ்சா பயன்பாடு என்பது இப்போது தொடர்ந்து வருகிறது. மெட்ரோ ரயிலில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியது பொதுவெளியில் தெரிந்த சம்பவம். ஆனால், தெரியாமலேயே பல சம்பவங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications