“தவெகவுக்கு இளைஞர்களை ஓட்டு போட விடாமல் போலீசார் தடுத்தனர்”.. ஆதவ் அர்ஜுனா புகார்!
சென்னை: தவெகவுக்கு ஓட்டு போட வந்த இளைஞர்களையும், பெண்களையும், காவல்துறையினர் தடுத்ததாக, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் நேரடித் துாண்டுதலில் போலீசார் தடுத்ததாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். தமிழகத்தின் சில இடங்களில் சிறு மோதல் சம்பவங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது. வாக்குப் பதிவு மாலை 6 மணி முடிவடைந்த பின்னரும் சில வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்க வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இறுதியாக 85.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், மதியம் 12 மணி முதல், தவெகவுக்கு ஓட்டு போட வந்த இளைஞர்களையும், பெண்களையும் தடுத்துள்ளனர். காவல் துறையின் இந்த அத்துமீறிய நடத்தையை எதிர்த்து, எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்க, சென்னையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆட்சியை இழக்கும் நிலையை அறிந்து கொண்டதால், முதல்வர் ஸ்டாலினின் நேரடித் துாண்டுதலில், காவல் அதிகாரிகள் கடைசி முயற்சியாக, இந்த ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, போதுமான அளவு பேருந்துகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்துகள் கிடைக்காமலும், கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரிகளிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, "உலகெங்கும் உள்ள தமிழர்கள் இங்கு வந்து வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால், நேற்று மாலை முதலே சென்னையின் பேருந்து நிலையங்கள் முடக்கப்பட்டுள்ளது. இரவு குடும்பம், குடும்பமாக கைக்குழந்தைகளுடன் பெண்களுக்கு பேருந்து வசதி கூட செய்து தர முடியவில்லை. இத்தனைக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
பொங்கலுக்கும், தீபாவளிக்கும் செய்து கொடுப்பது போல இதற்கும் செய்து கொடுத்திருக்க வேண்டும். போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சிரு ஐஏஎஸ், மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், ஆர்.மோகன் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுமே மக்களுக்கு சேவை செய்யும் இடத்தில் உள்ளனர். இன்றும் காபந்து முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்கும் அதிகாரிகளாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பேச்சை அவர்கள் கேட்பதில்லை.
லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக 7 மணி நேரம், 8 மணி நேரம் இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். சென்றவர்களும் பாதி பேர் திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காவல்துறையினர் எந்த இடத்திலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை.
மு.க.ஸ்டாலினின் பயம் என்னவென்றால் மக்கள் அதிகளவு வாக்களித்தால் படுதோல்வி அடைவோம் என்று சில ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்துகிறார். லட்சக்கணக்கான மக்கள் குடும்பம், குடும்பமாக தன்னெழுச்சியாக ஜனநாயக கடமையாற்ற செல்லும்போது பேருந்து வசதி கூட செய்து தர முடியவில்லை. தமிழக மக்களுக்கு 3 அதிகாரிகள் சொல்ல வேண்டும். மு.க.ஸ்டாலின் மக்கள் ஓட்டுப்போடுவதை தடுத்து நிறுத்தியுள்ளார்." எனக் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications