ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவின் கோட்டையான சென்னையில் தவெகவினர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சபரீசனுக்கு நெருக்கமான அண்ணாநகர் கார்த்திக் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக அங்கு ஏசி வசதியுடன் தவெக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா
வருகிற மார்ச் 30 ஆம் தேதி (திங்கள் கிழமை) விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினமே தவெகவினர் பெரும்பாலானோர் வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இதேபோல தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். திமுக அதிமுகவுக்கு இணையாக தவெகவினரும் அந்தந்த தொகுதிகளில் பரிசுகளை இறக்கி வருகிறார்கள். ஆதவ் வில்லிவாக்கம் தொகுதியில் கவனம் செலுத்தி டேபிள் ஃபேன் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகிறார்.
திமுக பக்கா பிளான்
திமுக எதிர்ப்பு அரசியலை தான் தவெக தீவிரமாக முன் வைத்து வருகிறது. அதில் விஜய்யை விட திமுகவை அதிகம் விமர்சிப்பது ஆதவ் அர்ஜுனா தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்ததில் இருந்து ஆதவ் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியதாக ஆதவ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
திமுக கோட்டையான சென்னையை குறித்து தவெகவினர் காய் நகர்த்தி வருகிறார்கள். தவெகவினருக்கு எதிராக திமுகவும் பலமாக திட்டமிட்டுள்ளனர். தவெகவுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை களமிறக்க திமுக திட்டமிட்டு வருகிறார்கள். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா இரண்டாம் இடத்திற்கு கூட வந்துவிட கூடாது என்று களமாடி வருகிறார்கள்.
சபரீசனின் வலதுகரம்
வில்லிவாக்கம் தொகுதியில் அண்ணாநகர் எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் மோகன் திமுக வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகனின் மகன் என்கிற அடையாளத்தை கடந்து கார்த்திக், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் நெருக்கமாக இருக்கிறார். திமுகவினர் அவரை அண்ணாநகர் கார்த்தி என்றழைப்பார்கள். சபரீசனுடனான நெருக்கத்தால் அவரும் திமுகவில் ஒரு பவர் சென்டராக உள்ளார்.
சபரீசனின் அஸைன்மென்ட் அடிப்படையில் தான் கார்த்திக் வில்லிவாக்கத்தில் களமிறங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வில்லிவாக்கத்தில் திமுகவினர் தீயாக இறங்கி வேலை பார்ப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதனால் வில்லிவாக்கம் தொகுதியில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.












Click it and Unblock the Notifications