எனக்கு எப்படிப் பணம் வருகிறது? நான் ஆடம்பரமாக வாழ்கிறேனா? வெளிப்படையாகப் பேசிய அமீர்
சென்னை: தன் மீதான வழக்குக்குப் பின் நண்பர்கள் பலரும் அச்சத்தில் பறவையைப் போலப் பறந்து சென்று விட்டனர் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
ஜாபர் சாதிக் வழக்குக்குப் பிறகு அதிக விமர்சனங்களை எதிர்கொண்டவர் இயக்குநர் அமீர். இதற்கான விசாரணைகளை அவர் வெளிப்படையாக எதிர்கொண்டு வருகிறார்.

ஆனால், அதைத்தாண்டி அவர் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதால், அந்த வழக்கு தொடர்பான செய்திகள் பரபரப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அவர் உண்மையாகவே மனம் திறந்து ஒரு யூடியூப் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதைப் பலரும் சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
அந்தளவுக்கு வெளிப்படையாகப் பேசி இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பேட்டியில் அவர் எதிர்கொண்டுள்ள வழக்கு குறித்தும் பேசியிருக்கிறார் அமீர். 'நான் சமூகத்தைப் பற்றி கருத்துச் சொல்லும் போது என் விசயத்தில் பலரும் கருத்துச் சொல்லத்தானே செய்வார்கள். அது ஜனநாயகம் தானே' என்று அவர் சொன்னதை நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
அமீர் தனது பேட்டியில், "அமீருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இவர் எப்படி வசதியாக வாழ்கிறார்? ஆடம்பரமாக வாழ்கிறார்? எனப் பலரும் இப்போது பேசுகிறார்கள். நான் ஆடம்பரமான ஆள் கிடையாது. என்னிடம் ஆடம்பரமான கார் கிடையாது. மிகப்பெரிய நீச்சல் குளத்துடன் பங்களா கிடையாது.
ஆனால், அப்படி இருந்தும் என்னை நான் கம்ஃபர்ட் ஆக வைத்திருக்கிறேன். நான் சம்பாதிப்பது, என்னிடம் உள்ள சேமிப்பு அனைத்தையும் எனக்குத்தான் செலவு செய்கிறேன். என்னை என்றால், என்னைச் சார்ந்தவர்களுக்கும்தான். பின்னால் 50 வருடங்கள் கழித்து நமக்குப் பணம் உதவும் என்று சேர்த்து வைக்கவில்லை.

ஆகவே, பார்ப்பவர்களுக்கு எப்போது செலவு செய்கின்ற ஆளாக எப்படி இருக்கிறான் என்று தோன்றுகிறது. சந்தேகம் வருகிறது.
நான் முதன்முதலாக சினிமாவில் நடிப்பதற்காகத்தான் சென்னைக்கு வந்தேன். பலருக்கும் அது தெரியாத விசயம். 1996இல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சீரியல் எடுத்தார்கள். அதற்கு 'அதே கண்கள்' என்று தலைப்பு. அதில் நடிக்க வாய்ப்பு வந்தது.
மதுரையிலிருந்து நான் எப்படி வந்திருப்பேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? காலை 8 மணிக்குச் சென்னையில் இருக்க வேண்டும் என்றார்கள். அதற்காக என்.இ.பி.சி என்று ஒரு விமானம் இருந்தது. அந்த விமானத்தில்தான் முதன்முதலாகச் சென்னை வந்தேன்.
அன்றைக்கு ஒரே ஒரு ப்ளைட்தான் மதுரை டூ சென்னைக்கு. அன்றைக்கு ஆன் லைனில் புக் பண்ணி எல்லாம் ப்ளைட் டிக்கெட் எடுக்க முடியாது. டிராவல் ஏஜென்சி போய் புக் பண்ணித்தான் டிக்கெட் வாங்க வேண்டும். அப்படித்தான் சென்னை வந்தேன்.
அன்றைக்கு 5,500 ரூபாய் டிக்கெட்.
மதுரையில் எனக்கு இருந்த நட்பு இன்றும் அப்படியேதான் உள்ளது. 14 வயதிலிருந்து உள்ள நட்புகள் அப்படியேதான் இன்று உள்ளன. ஆனால், சென்னைக்கு வந்த பிறகு ஏற்பட்ட தொழில் ரீதியான நட்புகள்தான் நான் தோல்வியைச் சந்தித்தபோது பறந்து போய்விட்டார்கள். அதைப் பார்த்து நான் கலங்க மாட்டேன். மிகமிக நேர்மறையாகத்தான் எடுத்துக்கொள்வேன்.
இன்று வரும் செய்திகள் பலரைப் பயப்பட வைக்கலாம். ஆகவே அவர்கள் விலகிச் செல்லலாம்.
ஆனால், என் நிலைமை பலருக்கு வந்திருந்தால், நான் அவர்களை விட்டுப் பயந்து போக மாட்டேன். அவருடன் கூடவே இருப்பேன். அவரைப் பல வருடங்களாக அறிவேன். அவர் அப்படிச் செய்து இருக்க மாட்டார் என்று வாதிடுவேன். அப்படி அவர் தவறு செய்திருக்கிறார் என நிரூபித்தால் தண்டனை கொடுங்கள். சட்டம் அவரை தண்டிக்கட்டும் என்பேன். அது என் மனநிலை.

நேற்று வரை என்னோடு நண்பர்களாக இருந்தவர்கள், இன்று இல்லை என்பதால் அந்த நட்பை யாரும் மறைத்துவிட முடியாது.
உண்மையைச் சொன்னால் நான் இப்போது சுதந்திரமாக ஆகி இருக்கிறேன். எனக்கு 365 நாள்கள் போதவில்லை. கல்யாணம், காது குத்து என்று எல்லா விசேஷத்திற்கும் போக வேண்டி இருக்கிறது. அதிலிருந்து இப்போது விடுதலை ஆகி இருக்கிறேன்.
என்னை விசாரணை வளையத்திற்குக் கொண்டு போய் வைக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது. அது அருமையான கேள்வி. சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் உள்ள நபர் நீங்கள். ஒருவருடைய காரில் பயணிக்கும் போது, அவர் எப்படிப் பட்டவர்? சரியானவரா? என்பதை எல்லாம் யோசித்துத்தானே பயணிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.
அது சரியான கேள்வி. அந்த நேரத்தில் நான் யோசித்திருக்க வேண்டும். எல்லா விசயத்திற்கு நான் கருத்துச் சொல்கிறேன். என் பிரச்சினை என்று வந்தால் சிலர் கருத்துச் சொல்லத்தானே செய்வார்கள். அவர்களைச் சொல்லக் கூடாது என்று எப்படி நான் சொல்ல முடியும். அது தானே ஜனநாயகம்.
சொல்லப் போனால், இந்த வழக்கு வந்த பிறகு நான் டைரக்டரா என்று எனக்கே சந்தேகம் வந்துள்ளது" என்று மிக யதார்த்தமாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications