ரூ 2,438 கோடி அபேஸ்.. ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரீஷ் கைது
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர்.

2438 கோடி
இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலித்தது தெரியவந்தது. ஆனால் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

8 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்யப்பட்டார். அது போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்த வருமானமும் இல்லை
ஆருத்ராவின் இயக்குநர் ஹரீஷுக்கு எந்த வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஹரீஷின் சொத்து மற்றும் வங்கிக் கணக்குகளை ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியிருந்தனர். இந்த வழக்கில் இதுவரை 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிரடி சோதனை
இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் என்ற மூவரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள 26 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 70 வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கம் செய்துள்ளனர். இந்த நிறுவனம் குறித்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

ரூசோ கைது
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட தொழிலதிபரும் நடிகருமான ரூசோ கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவருடைய வங்கிக் கணக்கில் ரூ 1 கோடியே 40 லட்சத்தை முடக்கி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரூசோ ஐஏஎஸ் பயிற்சி அகாதெமியையும் நடத்தி வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கியதும் ரூ 10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியதும் தெரியவந்தது. இவர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் படத்தை தயாரித்து அந்த படத்தில் போலீஸ் எஸ்பி வேடத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் அந்த படம் முடிவடையவில்லை.












Click it and Unblock the Notifications