ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆருத்ரா மோசடி தான் காரணமா? போலீஸ் குற்றப்பத்திரிகையில் உள்ள மிக முக்கிய தகவல்
சென்னை: பகுஜுன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த கொலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், ஆருத்ரா மோசடிக்கும் இதற்கும் கூட தொடர்பு இருப்பதாகச் சிலர் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையே இது குறித்து போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பகுஜுன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் அருகே வைத்தே இவரைச் சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின. இந்த விவகாரத்தில் போலீசார் தனது விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். திருவெங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
ஆருத்ரா மோசடி: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து இணையத்தில் பலவித தகவல்கள் பரவின. குறிப்பாக ஆருத்ரா மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதாவது சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக வைத்து ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனம் இயங்கி வந்தது. 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் இவர்கள் முதலீடுகளைப் பெற்றன. இருப்பினும், சொன்னபடி வட்டி தராமல் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.
இதுபோல சுமார் 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தன. இது தொடர்பாக 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பலர் கைது செய்யப்பட்டன. இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சிலர், தங்கள் பணத்தை மீட்டுத் தர ஆம்ஸ்ட்ராங் உதவியை நாடியதாகவும் அதற்கான முயற்சியை அவரும் எடுத்தாக சொல்லப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையில் தகவல்: இந்த விவகாரத்தில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலரும் இது குறித்துப் பேசியிருந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் சில முக்கிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக ஆருத்ரா கோல்டு மோசடிக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு போலீசார் பதில் அளித்துள்ளனர். அதாவது ஆம்ஸ்ட்ராக் அரசு வளர்ச்சியைத் தடுக்கவே கொலை நடந்துள்ளதாகவும் ஆருத்ரா கோல்டு மோசடிக்கும் இந்த படுகொலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் அஸ்வத்தாமன் நில விவகாரம், சம்போ செந்தில் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரம், ஆற்காடு சுரேஷ் கொலை விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை விவகாரம் ஆகியவையே ஆம்ஸ்ட்ராக் கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
பகீர் திட்டம்: சுமார் 6 மாதங்கள் திட்டம் போட்டு ரெக்கி ஆப்ரேஷன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றியதாக அதில் கூறப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளான். இரண்டாவது குற்றவாளியான சம்பே செந்தில் பணம் திரட்டி உதவியிருக்கிறான். மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் திட்டத்தைச் செயல்படுத்தியதாகக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications