விரைவில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்? மக்கள் சொல்வது என்ன! சர்வே முடிவை சமர்ப்பித்த ஆவின் நிறுவனம்
சென்னை: கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வது குறித்து நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் குறித்த தகவல்களை ஆவின் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது சமர்ப்பித்துள்ளது.
உலகெங்கும் பிளாஸ்டிக் மாசுபாடு மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. மனிதர்களே செல்லாத சிறு தீவுகளிலும் கூட பிளாஸ்டிக் சென்றுவிடுகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இதனால் உலகில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை பயன்படுத்துக கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக் கவர்கள்: தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. இதற்கிடையே பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்வது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையில், ஆவின் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பதற்குப் பதிலாகக் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்கலாமே என்று கோரிக்கை முன்வைத்தனர்.
பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்குப் பதிலாகக் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்கலாம் என்றும் இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் என்று கூறினர். மேலும், குறித்து சர்வே நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை ஐகோர்ட் ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் இந்த சர்வே அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
சர்வே சொல்வது என்ன: ஐகோர்ட் உத்தரவின்படி ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவு அளிப்பீர்களா என்று ஆவின் சார்பில் சர்வே நடத்தப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, வடக்கு ஐகோர்ட் காலனி ஆகிய பகுதிகளில் இந்த சர்வே நடத்தப்பட்டது. அதில் ஆவின் பாட்டிலில் விற்க வேண்டுமா? அல்லது பிளாஸ்டிக் கவரில் விற்க வேண்டுமா? என கேட்டிருந்தனர்.
அதில் பெரும்பாலான மக்கள், பாலை பாட்டிலில் விற்பனை செய்யும் போது அதன் விலை அதிகரிக்கும் என்றும் இதனால் பாலை பிளாஸ்டிக் கவர்களிலேயே தொடர்ந்து பெற விரும்புவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த அறிக்கையைத் தாக்கல் செய்த ஆவின் நிர்வாகம், நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை அக். 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications