அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சிலை.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்துல்கலாம் சிலை திறப்பு நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.. இந்த நிகழ்ச்சி தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் சங்க மாநில தலைவர் எம்எம்ஆர். மதன் தெரிவிக்கையில், "சென்னையில் முன்னாள் குடியரசு தலைவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் எங்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கப்பட காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழர் இளைஞர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிலை திறப்பு விழாவில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும்,
தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச்சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு.பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள்தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்தியாவின் தலைசிறந்தவிஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications