பறிபோன மாவட்டச் செயலாளர் பதவி! ஸ்டாலினை சமாதானம் செய்ய அப்துல் வஹாப் சென்னையில் முகாம்!
சென்னை: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையை சமாதானம் செய்ய சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பானிலிருந்து நேற்றிரவு திரும்பிய நிலையில் அவரை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் பகுதிக்கே சென்ற அப்துல் வஹாப், அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டு தனது அட்டெண்டன்ஸை காட்டிக்கொண்டார்.

கடந்த 21ஆம் தேதி அன்று நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. விடுவிக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் மைதீன் கானை நியமிப்பதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது ஸ்டாலின் ஜப்பான் புறப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்துல் வஹாப்பால் உடனடியாக ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. ஸ்டாலின் ஜப்பானிலிருந்து திரும்பியதும் அவரை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்த அப்துல் வஹாப் இப்போது சென்னையில் முகாமிட்டு ஸ்டாலினை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்துல் வஹாப் மீதான முதலமைச்சரின் கோபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுடன் பனிப்போர், மாவட்ட பொறுப்பு அமைச்சரான ராஜகண்ணப்பனோடு முரன்பாடு, பிரபல ஜவுளிக்கடைக்கு எதிரான குடைச்சல் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமாக சொத்து விவகாரம் தொடர்பான ஆடியோ என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
இதனிடையே முதலமைச்சரை அழைத்து வந்து அவரது தலைமையில் தனது மகன் திருமணத்தை நடத்திக்காட்டுவேன் என்பதில் உறுதியாக நின்ற அப்துல் வஹாப், பதவி பறிப்பு பற்றிய அறிவிப்புக்கு பிறகு சோர்வடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாத அப்துல் வஹாப் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்க காத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications