இந்தியாவிலேயே முதல் முறை.. ஆவணங்களே இல்லாவிட்டாலும், நிலத்தின் விவரம் அறியலாம்.. தமிழக அரசு அசத்தல்
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு பத்திரப்பதிவில் புதிய புரட்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்ய போகிறது. தமிழ்நாட்டில் நில மோசடிகளில் சிக்கி மக்கள் ஏமாறுவதை தடுக்கவும், நில ஆவணங்கள் தொடர்பாக துல்லியமான விவரங்களை அறியவும், பத்திரப்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இனி எந்த ஆவணங்கள் இல்லாவிட்டாலும், நிலத்தின் விவரங்களை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் அறிய முடியும்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்வோர் நிலத்தின் விவரங்களை அறிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நிலத்தின் விவரங்கள், பட்டா விவரங்கள், வரைபடம், பட்டா சிட்டா, சர்வே எண் உள்பட பல்வேறு விவரங்களை எளிதாக அறிய முடியும். கூகுள் மேப்பில் எந்த இடம் என்பதை பார்த்து, அந்த நிலத்தின் உரிமையாளரையும் எளிதாக அறிய முடியும். இப்படி அரசு அறிமுகம் செய்துள்ள பல்வேறு வசதிகளை ஆன்லைனில் பெற முடிகிறது.

பட்டா வரைபடம்
தமிழக அரசு இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய வகையில், https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பட்டா பெயர் மாற்றம்
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம் பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பட்டா மாறுதலில் உட்பிரிவு இனங்கள், உட்பிரிவு இல்லாத இனங்கள் இரண்டுக்குமே விண்ணப்பிக்க முடியும்.
புறம்போக்கு நில விவரங்கள்
பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க முடியும். இதேபோல் தமிழகத்தில் உள்ள நிலங்களின் அ-பதிவேடு விவரம், தமிழ்நாட்டில் உள் அரசு புறம்போக்கு நில விவரங்களை அறிய முடியும். மேலும் ஒரு நிலத்தின் புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட முடியும். மேலும் பதிவிறக்கம் செய்ய முடியும். பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களையும் அறிய முடியும். அதேபோல் ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல் விவரங்கள் போன்றவற்றை டவுன்லோடும் செய்யவும் இணைதளங்களில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
வில்லேஜ் மாஸ்டர்
இதேபோல் கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழக அரசு "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஆவணங்கள் இல்லாமல் பார்க்கலாம்
இந்த வசதி ஒரு புறம் எனில், துமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழக அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலத்தின் உரிமையாளரை அறியலாம்
இதன் மூலம், தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிய முடியும்.
இந்தியாவில் முதல் முறை
மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள காவல் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களையும் முழுமையாக அறியலாம். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல்முறையாக பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
சர்வே எண் இல்லாமல் நில விவரங்கள்
சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை யாராலும் தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்காக https://tngis.tn.gov.in/apps/ gi-viewer/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்யலாம். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறியலாம்.
TN-GIS மொபைல் ஆப்
தற்போது https://tngis.tn.gov.in/apps/ gi-viewer/ என்ற இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களையும் எளிதாக மக்கள் அறிய முடியும். இணையதளம் மட்டுமின்றி TN-GIS என்ற மொபைல் செயலி மூலமாகவும் நில விவரங்களை அறிய முடியும்.












Click it and Unblock the Notifications