தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. எந்தெந்த இடங்களில் மழை வெளுத்து கட்டபோகுது தெரியுமா?
சென்னை: தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் நியூஸ்.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது..தமிழ்நாட்டில் இங்கெல்லாம் மழை கொட்டபோகுது
தென்மேற்கு பருவமழை
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும் பெரும்பாலும் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது. கேரளாவின் தெற்கு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் நேற்று அறிவித்தது.
டெல்டா மாவட்டங்களில் கனமழை
இந்த நிலையில் தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் மற்றும் தென் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும். மதுரை, விருதுநகர் , ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் எப்படி?
கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்துக்கு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளில் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரள மற்றும் கர்நாடக பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.