ஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு
சென்னை: மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தவறிய 52 ஆயிரம் மருத்துவ நிறுவனங்களை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் தனியாரால் நடத்தப்படும் மருத்துவம் சார்ந்த அனைத்து மருத்துவ நிறுவனங்களையும், அதற்கென உள்ள ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 2018 தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்குடன், மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வதிகள் மற்றும் தரமான சேவையை அளிக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கண்ட சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே, கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தொடர்ந்து இயங்க அரசு அனுமதிக்கும். இதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மார்ச் 31ம் தேதி முடிவடைந்துவிட்டது.
ஆனால் தமிழகத்தில் உள்ள 72 ஆயிரம் மருத்துவ நிறுவனங்களில், இதுவரை 23 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 52 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யாத மருத்துவ நிறுவனங்கள் மூடப்படும் என மருத்துவ பணிகள் இயக்குனர் கூறியுள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவச் சங்கம் தற்போதைய மருத்துவ பணிகள் இயக்குனர் சட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க மும்முரமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மருத்துவமனைகளை ஆய்வு செய்ய தனி குழுக்களை அமைத்து பின்னர் உரிய முறையில் உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து தருமாறும் இந்திய மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் விரைந்து உரிய முறையில் பதிவு செய்யும் பட்சத்தில், மருத்துவ நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரச்சனையின்றி இயங்க உரிமம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications