அட்டாக்கை ஆரம்பித்த திமுக..விக்கிரவாண்டியில் எஸ்கேப்பான அதிமுக! இருதலைக்கொள்ளி எறும்பாக ர.ர.க்கள்!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது அந்த கட்சி தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விடுவாரோ என்ற அச்சம் தங்களுக்கு எழுந்திருப்பதாக கூறுகின்றனர் நிர்வாகிகள்..
கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்தார்.

இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது. இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சி அராஜகம், பணபலம், வாக்குச்சாவடிகளை பிடித்து தேர்தலை நியாயமாக நடத்த மாட்டார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். இதனால் நிர்வாகிகள் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆளும் கட்சியான திமுக வேட்பாளரை முதல் ஆளாக அறிவித்த நிலையில் அடுத்த சில நாட்களில் அதிமுக வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக தலைமை எடுத்த முடிவால் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இருந்தபோதும் திமுக ஏற்கனவே தேர்தல்களை புறக்கணித்து இருக்கிறது.. 2009 நடந்த பல்வேறு தேர்தல்களை அதிமுக புறக்கணித்தபோதும் 2011 தேர்தலில் ஜெயலலிதா பெரு வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார் என கூறி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு வழி சேர்ப்பது போல முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர் .இதே கருத்தை தான் அவர்களும் முன் வைக்கின்ற நிலையில் அதிமுக கடைமட்ட தொண்டர்கள் தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாகவே இருக்கின்றனர். ஏற்கனவே நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. தற்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணித்திருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் நடக்க இருப்பதாக கூறப்படும் உள்ளாட்சி தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விடுவாரா என்ற அச்சத்தில் உள்ளனர்.
பொதுவாக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் எம்எல்ஏ எம்பிக்களாக இருந்தாலும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கவுன்சிலர்கள் வார்டு மெம்பர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளை வகிப்பதை விரும்புகின்றனர். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் தான் அவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றும் தேர்தலாக இருக்கிறது. ஏற்கனவே அதிமுக ஒருமுறை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தும் இருக்கிறது.
இந்த நிலையில் 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி 12வது தேர்தலான விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்திருக்கிறார். மேலும் அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருக்கிறார் என கூறி வருவது அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பாரா அல்லது எதிர் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications