அஜித்தின் துணிவு டிரெய்லர்: 1987-ல் உலகை அதிர வைத்த பஞ்சாப் வங்கி கொள்ளை சம்பவம்தான் கதை?
சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. துணிவு பட டிரெய்லர் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து மிகப் பெரிய வங்கி கொள்ளையை மையமாக கொண்டதுதான் துணிவு படத்தின் கதை என்பது பொதுவான பேசுபொருளாக இருக்கிறது.
பொங்கல் திருநாளுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. தல, தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பெரும் தீனி போடக் கூடியதாக இரு படங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படங்களை வெளியிடுவதற்கான திரையரங்குகள் தொடங்கி போஸ்டர் யுத்தம் வரை இப்பவே கண்ணை கட்டுதே நிலைமையாகத்தான் உள்ளது.

அஜித்தின் துணிவு பட டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் டிரெய்லரை ஒரு சினிமா போல கொண்டாடி வருகின்றனர். இந்த டிரெய்லரில் உற்சாகமாக அஜித் வெளிப்படுகிறார்; அஜித் ரசிகர்களுக்கு அற்புதமான படமாக டிரெய்லர் இருக்கும் என்கின்றனர் விமர்சகர்கள்.
இதனிடையே டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஒரு வங்கி கொள்ளையை மையமாக கொண்டதாக யூகிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் அடிப்படை கதை 1987-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற மிகப் பெரிய வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டிருக்கலாம் அல்லது அதனை கருவாக வைத்து அஜித் ரசிகர்களுக்கான திரைப்படமாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
1987-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தாக்கி கொள்ளையடித்தது. ஒரே நேரத்தில் ரூபாய் 5.7 கோடி பணம் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்தியாவில் அதுவரை நடந்த வங்கி கொள்ளைகளில் மிகப் பெரிய கொள்ளையாக அச்சம்பவம் பார்க்கப்பட்டது.

இந்த வங்கிக் கொள்ளை சம்பவத்தில் பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வங்கி கொள்ளை தொடர்பாக வங்கி ஊழியர்கள் ஒருவர் கூட தீவிரவாதிகளை அடையாளம் காட்டவில்லை. மிகப் பெரிய டிரக்குகளை வங்கி முன்பாக நிறுத்தி கொள்ளையடித்ததாக நேரில் பார்த்த சிலர் சாட்சியம் அளித்திருந்தனர். இக்கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டிரக்குகள், ஜீப்புகள், ஸ்கூட்டர்கள் வனப்பகுதி ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டன.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் சீருடை அணிந்து அவர்கள் கொள்ளையடித்திருக்கின்றனர். பஞ்சாப் முன்னாள் போலீஸ் அதிகாரியும் பின்னாளில் காலிஸ்தான் தனிநாடு கோரிய பிந்தரன்வாலேவின் தளபதியுமான லாப் சிங் என்ற சுக்தேவ் சிங் தில்லான் தலைமையில்தான் இக்கொள்ளை அரங்கேறியது. இவ்வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கொள்ளையர்களான பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரமான பஞ்சாப் வங்கி கொள்ளையை மையமாக வைத்தே ஹெச்.வினோத், துணிவு படத்தை உருவாக்கி இருக்கிறார் என்கின்றன சினிமா வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications