Joju George: மூணாறு ஷூட்டிங்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து! ஜோஜு ஜார்ஜ் உள்பட 6 பேருக்கு காயம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரவு எனும் திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மூணாறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் த்ரில்லர் மூவியாக திகழும் என்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லக்கம் அருகே நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஜீப்பில் ஜோஜு செல்வது போல் படமாக்கப்பட்டது. மலை பாதை போன்ற இடத்தில் ஜீப்பை ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜ், நடிகர் தீபக் பரம்போல் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அது போல் சண்டை பயிற்சி கலைஞருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூணாறில் உள்ள டாடா மருத்துவமனையில் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.
இந்த படத்தில் இயக்குநர் ஷாஜி காளிதாஸுடன் ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் பின்னணி பாடகர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை பெற்றுள்ளார்.
இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு செகன்ட் கிளாஸ் யாத்ரா, லுக்கா சுப்பி ஆகிய படங்களுக்கு கேரள அரசின் விருதை பெற்றார். தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications