மூச்சுத்திணறல்...தேர்தர் பிரசாரம் செய்த நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: மருத்துவர்களின் அறிவுரையை மீறி தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் கர்த்திக் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி படங்களில் அவ்வப்போது கௌரவ வேடங்களிலும் நடித்துவருகிறார்.

கார்த்திக் கட்சி இந்த சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார் கார்த்திக். திடீரென உடல்நிலை பாதிக்கப்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் உடல்நலம் தேறிவந்த நடிகர் கார்த்திக், சொன்ன வார்த்தையை காப்பாற்றும் விதமாக தேர்தல் பிரசாரம் செய்தார். போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்த போது, "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி கந்தசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஞாயிறு கிழமையுடன் ஓய்ந்த நிலையில் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications