நான் விலகுகிறேன்.. "புலிப்படை" கருணாஸ் திடீர் புரட்சி.. அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போறாராம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவை குறிப்பிட்ட இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் கருணாஸ். சசிகலாவின் ஆதரவாளராகவே தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், லோக்சபா தேர்தலின் போதும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை.
கருணாசுக்கு ஏமாற்றம்
கூட்டணி பேச்சுவார்தைக்கு அழைப்பார்கள் என்று நம்பியிருந்தார் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ். இந்த சட்டசபைத் தேர்தலில் 4 இடங்கள் வரை கேட்கலாம் என்றும் நினைத்துக்கொண்டிருந்தார்.
அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை ஏமாற்றமே எஞ்சியது.
கூட்டணியில் இருந்து விலகல்
கருணாஸ் ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவந்தார். சிறையில் இருந்து விடுதலையாகி வந்த போதும் சசிகலாவிற்கு ஆதரவாக கருத்து கூறினார். இதனால் அவர் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது சந்தேகம்தான் என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் கருணாஸ் எம்எல்ஏ.
புறக்கணித்த அரசு
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், கடைசி நிமிடம் வரை எங்களை நம்ப வைத்து ஏமாற்றி அரசியலாக்கிவிட்டது எடப்பாடி அரசு என்று குற்றம் சாட்டினார். முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி பழனிசாமி அரசு புறக்கணித்திருக்கிறது.
துரோகம் செய்ய அரசு
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இளைஞர்களை திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோம். அதிமுகவை குறிப்பிட்டு இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி மாறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
வெளியேறி விட்டோம்
அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்திய காரணத்தினால் புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். சசிகலாவுக்கு வாழ்நாள் முழுவதும் நான் ஆதரவாளராக இருப்பேன்,
கூவத்தூரில் சத்தியம்
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை எப்படி வாங்கினார் என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். ஜெயலலிதாவின் படத்தின் முன்பாக அகல் விளக்கை வைத்து சத்தியம் செய்தனர். அதை யாராவது மறுக்க முடியுமா? நானும் தனியரசும் சத்தியம் செய்யவில்லை என்றும் கருணாஸ் கூறினார்.
அதிமுக நிறைவேற்றவில்லை
வன்னியருக்கு இடஒதுக்கீடு தேர்தல் ஆதாயத்திற்காக தந்து மற்ற சமுதாய மக்களிடம் விரோதம் ஏற்படுத்தி கொண்டது அதிமுக. முக்குலத்தோர் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன். முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைப்பதாக சொல்லி பாஜக அரசு ஏமாற்றவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.