எதார்த்தமானவர்.. ஈகோ இல்லாதவர்.. மாரிமுத்து மரணம் அதிர்ச்சி தருகிறது... கருணாஸ்
சென்னை: எதார்த்தமான நடிகர் பன்முக திறமை கொண்டவர் அவரது மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் கருணாஸ். இயக்குநராகவும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், சின்னத்திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மாரிமுத்து பல ஆண்டுகாலமாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் என்ற சின்னத்திரை சீரியல் மூலம் பலரது இல்லங்களிலும் இல்லத்தரசிகளின் நெஞ்சங்களிலும் நுழைந்தவர். பிரபலமடைந்த வேகத்திலே திடீரென மரணமடைந்து விட்டார்.

56 வயதான மாரிமுத்துவின் மரணச் செய்தியை கேட்டு பலரும் நம்பவில்லை. வதந்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர். சமீப காலங்களில் திரை பிரபலங்கள் மரணமடைந்து விட்டதாக பல வதந்திகள் வெளியாகி வருவதால் மாரிமுத்துவின் மரணமும் வதந்தியாகத்தான் இருக்கும் என்று அவரது நண்பர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அது உண்மைதான் என்று காலை 10 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. அவரது மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கருணாஸ் அதிர்ச்சியுடன் பேசியுள்ளார். அவருடன் கொம்பன் படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார் கருணாஸ். மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பரியேறும் பெருமாள் படத்தில் பேசப்பட்டது. எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பார்த்த நடிகர்களில் எதார்த்தமான நடிகர். பன்முகத்தன்மை கொண்டவர் மாரிமுத்து. இயக்குநராக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். இயக்குநர்கள் சொன்னதைக் கேட்டு எதார்த்தமாக நடிப்பார்.

புதிய இயக்குநர்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அவர்களை தனியாக அழைத்துப்போய் சொல்லிக்கொடுப்பார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கருணாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications