என் படத்தை யாரும் பார்க்கலைனா தற்கொலை செய்துக்குவேன்.. கண்ணீர் மல்க வீடியோ போட்ட நடிகர் மாயம்
சென்னை: தற்கொலை செய்ய போகிறேன் என தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எல்.வி.சுரேஷ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூ போன்ற காதல் என்ற படத்தை இயக்கி தயாரித்தவர் எல்.வி.சுரேஷ். இவர் இந்த படத்தில் நடிக்கவும் செய்தார். ஆனால் இது சரியாக போகவில்லை. இதனால் தான் கடனில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இந்த படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்ட சுரேஷ் தற்போது மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் LVS Entertainment ஆகும். சுரஷ் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். சினிமா மீது இவருக்கு இருந்த ஆசையால் பூ போன்ற காதல் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தை எடுக்க ரூ 5 லட்சம் கடன் பெற்றிருந்தாராம் சுரேஷ். தற்போது கடன் பிரச்சினை கழுத்தை நெரிக்கிறது.
இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய தியேட்டருக்கு சென்றவருக்கு அதிர்ச்சி. அங்கு எண்ணி 5 பேர் மட்டுமே படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த சுரேஷின் இதயமே நொறுங்கிவிட்டது போல் இருந்ததால் அழுதார். 20 டிக்கெட் கூட விற்பனையாகவில்லை.
இப்படியே போனால் தன்னால் உயிர் வாழ முடியாது. எனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி என்றார். இந்த வீடியோ அதிகமாக பகிர்ந்து எனக்கு உதவி செய்திட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் இவர் மாயமானதால் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இவர் டி.ராஜேந்தர் ரசிகர் என்றும் சொல்லப்படுகிறது. சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலை இதுதான் என்றும் திரைத்துறையும் ரசிகர்களும் சிறுபட்ஜெட் படங்களைப் புறக்கணிக்காமல் ஆதரவு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தனது மனைவி அனிதா பெயரில் அனிதா சுரேஷ் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications