மாரிமுத்துவின் ஆசை.. “உங்க வேட்டியை நான் துவைச்சுப் போடணும்”.. பதறிப்போன கி.ரா.. இவ்ளோ தீவிர வாசகரா?
சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் தீவிர வாசகராக இருந்த நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, கி.ரா வீட்டுக்குச் சென்று அவரது அழுக்கு வேட்டியை கேட்டு வாங்கி துவைத்துப் போட்டதாக எழுத்தாளர் சுகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில மாதங்களாக ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார் மாரிமுத்து.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். மாரிமுத்துவின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்துவின் பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த மாரிமுத்து, இலக்கிய வாசகராகவும் இருந்துள்ளார். தமிழில் நிறைய வாசிப்பு பழக்கம் கொண்டவராகத் திகழ்ந்துள்ளார்.
தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் இருந்து சென்னை வந்து, கவிஞர் வைரமுத்துவுக்கு உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் கடிதங்களை, படித்துப் பார்த்து அவரது ரசிகர்களுக்கு பதில் எழுதும் பணியைச் செய்துள்ளார் மாரிமுத்து. அந்தவகையில் நல்ல இலக்கியப் பரிச்சயமும் கொண்டவர். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் புத்தகங்களைப் படித்துள்ள வாசகர்.
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, எப்படிப்பட்ட வாசகர் என்பதை எழுத்தாளரும், இயக்குநருமான சுகா வெளிப்படுத்தியுள்ளார். சுகா, மறைந்த பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகன். நடிகர் மாரிமுத்து, எழுத்தாளர் கி.ராவின் தீவிர வாசகராக இருந்து வந்த நிலையில், அவரது வீட்டுக்குச் சென்று, அவரது வாசகனாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்காக அவரது வேட்டியை கேட்டு வாங்கி துவைத்துப் போட்டிருக்கிறார்.

இதுபற்றி எழுத்தாளர் சுகா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "மாரிமுத்துவைப் போன்ற தீவிர வாசகர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அவரது மறைவு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. உணர்ச்சிமயமான வாசகர் மாரிமுத்து என்பதற்கு சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். கி.ராஜநாராயணனின் எழுத்துகள் மீது அதீத மதிப்பு கொண்ட மாரிமுத்து, ஒருநாள் கிளம்பி புதுவைக்குச் சென்றிருக்கிறார். கி.ராவிடம் தன்னை ஒரு வாசகர் என்று சொல்லி அறிமுகமாகியிருக்கிறார்.
கி.ராஜநாராயணின் ஒவ்வொரு படைப்பாக எடுத்து ரசித்துச் சொல்லி கி.ராவை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அடுத்து கி.ராவிடம் தனது ஆசை ஒன்றை மாரிமுத்து சொல்ல, அதிர்ச்சியில் கி.ரா மறுக்க, விடாப்பிடியாக அதைக் கேட்டு வாங்கி செய்திருக்கிறார், மாரிமுத்து.
கி.ராவிடம் மாரிமுத்து கேட்டது இதுதான்.'ஐயா! ஒங்க எழுத்து மூலம் எனக்கு எவ்வளவோ குடுத்திருக்கீங்க. உங்க வேட்டியை நான் துவைச்சுப் போடணும்'. சொன்னபடியே இதை செய்து விட்டுதான் சென்னை திரும்பியிருக்கிறார், 'வாசகர்' மாரிமுத்து." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications