முழுநேர அரசியலுக்கு வருகிறாரா நடிகர் நந்தா?
சென்னை: நடிகர் நந்தா முழுநேர அரசியலுக்கு வர உள்ளதாகவும், விரைவில் அவருக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மவுனம் பேசியதே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நந்தா. அதற்குபிறகு ஈரம், வேலூர் மாவட்டம், உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களிடையே பரிச்சயம் பெற்றார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட இவர், திமுக முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனின் சொந்தப் பேரன் ஆவார்.

மு.கண்ணப்பனை பொறுத்தவரை திமுகவின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டச் செயலாளராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்தவர். வைகோ மதிமுகவை தொடங்கியதை அடுத்து, 1993-ம் ஆண்டு அவருடன் சென்றார். பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாய்க்கழகமான திமுகவில் இணைந்துக்கொண்டார்.
மு.கண்ணப்பனின் மகள் வழி பேரனான நடிகர் நந்தா குடும்பத்திற்கு பொள்ளாச்சி மற்றும் கோவையில் பல தொழில்கள் உள்ளன. அதை அவர் கவனித்துக்கொண்டாலே போதும் என்ற நிலையில், நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்து இன்று பெரிய நடிகராகவும் ஆகிவிட்டார். இந்நிலையில் தனது குடும்பமே திமுக பாரம்பரியத்தைக் கொண்டது என்பதால் நந்தாவும் முழு நேர அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்பட்ட நடிகர் நந்தா, உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இதனிடையே கோவை மாவட்டத்திற்கு இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைப்பதற்காக சென்ற உதயநிதிக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார் நந்தா. மு.கண்ணப்பன் குடும்பத்தில் அவருடைய மகன்களோ, மகள்களோ அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் தாத்தா கண்ணப்பனை போல் அரசியலிலும் சாதிக்க வேண்டும் என நினைக்கிறாராம் நடிகர் நந்தா.












Click it and Unblock the Notifications