கோவில் கட்டிய மதுரை ரசிகர்! வீட்டுக்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. செம
சென்னை: மதுரையில் தனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் ரசிகர் மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியதோடு, தனது இல்லத்தை சுற்றி காண்பித்து இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்.. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது ஸ்டைலான நடிப்பால் மக்களின் மனங்களை கவர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வரை மவுசு மட்டும் குறையவில்லை.

இன்னும் ரஜினிகாந்த் மீதான தீரா காதல் கொண்ட ரசிகர்கள் உள்ளனர். தனது பெயருடன் ரஜினி என்ற பெயரை சேர்த்து கொண்டு பலரும் வாழ்ந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நலத்திட்ட உதவிகளை பலரும் வழங்கி வருகின்றனர்.
இப்படியான ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மத்தியில் முற்றிலும் வேறுபட்டவர் தான் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரரான இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினியின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட கார்த்திக் தற்போது அவரை கடவுளாகவே பார்க்கிறார். அதாவது ரஜினிகாந்துக்கு, மாஜி ராணுவ வீரர் கார்த்தி கோவில் கட்டி சிலை நிறுவி உள்ளார்.
கார்த்தி தனது வீட்டில் ரஜினிகாந்துக்காக 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில்' ஒன்றை கட்டி உள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்தின் சிலையை நிறுவி வழிபாடும் நடத்தி வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ‛ரஜினி சதுர்த்தி டிசம்பர் 12’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார். நவராத்திரியை முன்னிட்டு ரஜினி இதுவரை நடித்த திரைப்பட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு அமைத்திருந்தார்.
இந்த கோவிலில் 250 கிலோ எடையில் 3 அடி உயரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிலை இருந்தது. கடந்த மாதம் ரஜினிகாந்த் பிறந்தநாளின்போது இந்த சிலை மாற்றம் செய்யப்பட்டது. கருங்கல்லில் 350 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய சிலை உற்சவ மூர்த்தியாகவும், பழைய சிலை மூலவராகவும் கோவில் உள்ளது.
இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின. இந்நிலையில் தான் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். தன்மீது கொண்ட அன்பால் கோவில் கட்டிய கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவைத்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்று அவரது குடும்பத்துடன் போட்டோ எடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு விருந்து வழங்கி வீட்டை சுற்றி காண்பித்துள்ளார். இதனால் மதுரையை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications