மக்கள் மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது.. ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்க போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினிகாந்த்.இதன்பிறகு, ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் மாற்றியமைத்தார் ரஜினிகாந்த். மக்கள் மன்றத்திற்கு, மாவட்ட அளவில் கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த்.
உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார். மேலும் சில புதிய விதிமுறைகளை வகுத்து அதை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விதிமுறைகளை மீறிய பலரும் மக்கள் மன்றத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

எச்சரிக்கை
ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளால் சில சர்ச்சைகள் ஏற்பட்டன. அதிக வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களை நீக்கிவிட்டு புதிதாக வந்தவர்கள் கோலோச்சுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் தனது மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசியல்
ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறோம். மக்கள் ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருப்பது மட்டுமே பொறுப்புகளை பெறுவதற்கும், அரசியலில் ஈடுபடுவதற்கான தகுதி ஆகிவிடாது.

புத்தி பேதலித்துவிட்டது
எண்ணங்கள் சரியாக இருந்தால் செயல்கள் சரியாக இருக்கும். ஊடகங்கள் மூலமாக நம்மை பற்றி அவதூறு பரப்புபவர்கள் நமது ரசிகர்களாக இருக்க முடியாது. மக்கள் மன்றம் மூலம் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கலாம் என்று நினைத்தால் புத்தி பேதலித்து விட்டது என்று அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது.

நான் அறிவேன்
மன்றத்திற்காக உண்மையாக உழைப்பவர்களை நான் நன்கு அறிவேன். அவர்கள் உழைப்புகள் வீண்போகாது. ஒழுங்கு நடவடிக்கை அனைத்துமே எனக்கு தெரிந்துதான் எடுக்கப்பட்டு வருகிறது. எனக்கு தெரியாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்காக நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். குடும்பத்தை கவனிக்காமல் யாரும் மன்றத்திற்கு வர வேண்டாம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

போராட்டங்கள்
மக்கள் மன்றத்தில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நீண்ட கால ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இதெல்லாம் ரஜினிகாந்த்துக்கு தெரியாமல் நடக்கிறது என்று பேட்டியளித்தனர். இந்த நிலையில்தான், அப்படியான ரசிகர்களை எச்சரித்து ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications