ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின் "வெற்றிடத்தை" நிரப்பிய 'முதல்வர் ஸ்டாலின்'.. ரஜினிகாந்த் வாக்குமூலம்
முதல்வர் ஸ்டாலினை பாராட்டியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரத்தால் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் வெற்றிடம் இருக்கு.. நிரப்பத்தான் நான் வருகிறேன் என்று சொன்ன அதே ரஜினிகாந்த் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் ஆளுமைகளாக திகழ்ந்த ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் ஆகப் பெரும் ஆளுமைகளே இல்லை என சில தரப்பு ஊடகங்கள் கட்டமைக்க முயற்சித்தன.

இதனை நடிகர் ரஜினிகாந்த், பாஜக உள்ளிட்டவை பொது இடங்களில் பகிரங்கமாகவே தெரிவித்தன. அதுவும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்ட போதே இப்படி பேசியிருந்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி, மக்கள் இன்னும் அவரை மறக்கவில்லை. 1973ல் எம்ஜிஆரைப் பார்த்தேன். எம்ஜிஆர் ஒரு யுகப்புருஷன், அவரைப் போல இனி யாரும் வர முடியாது. ஏழை, எளிய மக்களுக்கு எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும். நடிகனாக நான் என் வேலையை நன்றாக செய்து கொண்டிருக்கிறேன், ரசிகர்களை 60 வயதிலும் நான் மகிழ்வித்து வருகிறேன். ஜெயலலிதா இருக்கும் போது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள், அப்போது வராததற்கு பயம் காரணமா என்றும் கேட்கிறார்கள். ஜெயலலிதா இருந்த போதே நான் அரசியலுக்காக குரல் கொடுத்தேன். அப்போதே பயம் இல்லாத போது இப்போது எப்படி பயம் இருக்கும். இப்போது தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயலலிதா மறைந்து விட்டார். தமிழ்நாட்டில் நல்ல தலைவன் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு நான் வர விரும்புகிறேன் என்றார்.

கருணாநிதி மறைவுக்குப் பின்னரும் இதேபோல பல முறை பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் என்ற ரஜினிகாந்த் பேச்சு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. சமூக வலைதளங்களில் மிக கடுமையாக ரஜினிகாந்த் விமர்சிக்கப்பட்டார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்துக்காகவே இத்தகைய கருத்துகளை பேசியும் வந்தார். ஒரு கட்டத்தில் ஆளைவிட்டால் போதும் என அரசியலுக்கே வரவில்லை பெரும் கும்பிடுபோட்டு ஒதுங்கிக் கொண்டார் ரஜினிகாந்த். ஆனாலும் ரஜினிகாந்த் பற்ற வைத்த வெற்றிடம் எனும் நெருப்பு சொல் இன்னமும் சில தலைவர்கள் மூலம் பேசப்பட்டுதான் வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இன்று நடிகர் ரஜினிகாந்த் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், என் இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான். 4 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர் அவர். கட்சியில் உழைத்து படிப்படியாகப் பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அவர் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட நாள் ஆயுள் உடன் இருந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவருக்கும் எனக்குமான நட்பைச் சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் வரும் போது சொல்வேன் என பாராட்டு மழை பொழிந்தார்.

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது என அன்று பேசிய அதே ரஜினிகாந்த், அந்த வெற்றிடத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக இன்று தந்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications