போயஸ் கார்டனில் "ஜெயலலிதா இல்லம்.." சசிகலா புதிதாக கட்டிய வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லம் என்ற பெயரில் சசிகலா புதிதாக வீடு கட்டியுள்ளார். கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில், இன்று சசிகலா வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்து வந்தார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பரப்பன அக்ரஹார சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டனர். இதையடுத்து 2020 ஆம் ஆண்டு சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆனார். அப்போது முதல் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என்று சசிகலா கூறி வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டிற்கு சசிகலா சென்றார். அங்கு ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கட்டப்படும் நினைவிடத்திற்கும் அவர் அடிக்கல் நட்டியிருந்தார். இதற்கிடையே, சென்னையில் போயஸ் கார்டனில் வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா வீடு கட்டி குடியேற திட்டமிட்டார்.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்த நிலையில், கடந்த மாதம் பங்களாவுக்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையும் தான் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் வரையிலும் போயஸ் தோட்ட இல்லத்திலேயே தங்கியிருந்த சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்ததும் சென்னை திநகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார்.
அங்கிருந்தபடியே போயஸ் தோட்டத்தில் வீட்டை கட்டி முடித்தார். இந்த புதிய இல்லத்திற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடந்தது. இதற்கு மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே சென்றிருந்தனர். அந்த வீட்டில் சுமார் 7 ஆண்டுகள் கழித்து போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா குடிபெயர்ந்துள்ளார். இந்த பங்களா 24000 சதுர அடி கொண்டது. வேதா இல்லத்தை விட பெரிதாக கட்டப்பட்டுள்ளது. தரைதளம், அதற்கு மேல் இரு தளங்கள் உள்ளன.
இந்த வீட்டிற்கு "ஜெயலலிதா இல்லம்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த தினமான இன்று சசிகலா புது இல்லத்தில் குடியேறினார். இந்த நிலையில், போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். கிரகபிரவேசத்தில் பங்கேற்காத இயலாத சூழல் இருந்ததால், இன்று ரஜினிகாந்த் சசிகலா வீட்டிற்கு சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்தும் போயஸ் கார்டன் பகுதியிலேயே வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications