”விஜயகாந்த் சிக்கிரம் குணமடைந்து கர்ஜிக்கனும்.. இறைவனிடம் வேண்டுறேன்” - ரஜினிகாந்த் ட்வீட்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால்களில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இன்று காலை தேமுதிக தலைமையகம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார்.

மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கால் விரல்கள் அகற்றப்பட்டு உள்ள செய்தியறிந்து விஜயகாந்த் உடல்நலம் பெற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications