"விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க?”.. பெரம்பூர் தொகுதியில் களமிறங்கி வெளுத்து வாங்கிய சத்யராஜ்
சென்னை: விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நடிகர் சத்யராஜ் களமிறங்கி பிரச்சாரம் செய்துள்ளார். "சின்ன சம்பளம் வாங்குற என்னையே மக்கள் ஈசியா சந்திச்சு பிரச்சனையை கேட்க முடியாது. அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய் பார்ப்பீங்க?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்யராஜ்.
2026 சட்டசபை தேர்தலில் சத்யராஜ், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையை இன்று தொடங்கி உள்ளார் சத்யராஜ்.

ஏப்ரல் 18 ஆம் தேதி ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு வி க நகர், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் சத்யராஜ். ஏப்ரல் 19ஆம் தேதியான நாளை மாதவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
அந்தவகையில் இன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் சத்யராஜ். பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில், அங்கு அவரை கடுமையாக விமர்சித்துப் பிரச்சாரம் செய்துள்ளார் சத்யராஜ்.
சத்யராஜ் பேசுகையில், "தனது கொள்கைத் தலைவராக அம்பேத்கர், பெரியார் எனச் சொன்னபோது, விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பேசப் பேச.. தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி மரியாதை இல்லாமல் பேசினார். முதலில் ஸ்டாலின் சார் என்றார். அப்புறம் ஸ்டாலின் அங்கிள் என்று சொன்னார். எல்லோரையும் மரியாதையாகப் பேசும் விஜய் என்ன இப்படி பேசுகிறார் எனத் தோன்றியது. நாம பார்த்த விஜய் இப்படி இல்லையே..
தலைவா படம் வந்தபோது, கொடநாட்டுக்குப் போய் ஜெயலலிதாவை பார்த்தபோது, அம்மா அம்மா.. என்னை ரொம்ப மன்னிச்சுக்கங்கம்மா.. என் தலைவா படத்தை எப்படியாச்சும் ரிலீஸ் பண்ணி விடுங்கம்மானு பேசுனாரு இல்லையா? அப்படித்தான் மரியாதையாக பேசுவார் என்று பார்த்தால் ஸ்டாலின் அங்கிள் எனப் பேசிவிட்டார்.
இப்படி ஜெயலலிதாவை பேசி இருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். அப்புறம் மேடையில் வந்து நான் ரெடி தான் என்றெல்லாம் பாடியிருக்க முடியாது. ஒரு முதலமைச்சர் பெருந்தன்மையாக இருக்கிறார் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவதா?" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "சின்ன சம்பளம் வாங்குற என்னையே மக்கள் ஈசியா சந்திச்சு பிரச்சனையை கேட்க முடியாது. அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய் பார்ப்பீங்க?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்யராஜ். விஜய் போட்டியிடும் தொகுதியில் நடிகர் சத்யராஜ் களமிறங்கி பிரச்சாரம் செய்திருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
சத்யராஜ் பல திரைப்படங்களில் சமூக நீதி, திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவு கருத்துகளை வலியுறுத்திய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அவரது அரசியல் பயணம் திமுகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளைப் பாராட்டி உள்ளார்.. சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஏற்கனவே திமுகவில் இணைந்து, அக்கட்சியின் ஐ.டி விங்கில் செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications