கெளரவம் பார்க்காமல் ஸாரி சொன்ன சிவக்குமார்... பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்
நடிகர் சிவகுமார் தன் செயல் குறித்து வருத்தம் தெரிவித்திருப்பதன் மூலம் தான் ஒரு பெரிய மனிதர் என்பதை நிரூபித்து விட்டார்.
Recommended Video
சென்னை: செல்போன் விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் I am very sorry என்று கேட்டிருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இப்படி ஒரு முன்மாதிரி கலைஞனை காண முடியுமா என்று சொல்லக்கூடிய அளவுக்குதான் சிவகுமாரின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. நாற்றமெடுக்கும் சினிமா துறை என்று விமர்சனம் சொல்லப்பட்டாலும் இந்த துறையிலும் தூய வாழ்க்கையை வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.
யோகா பழக்கம்
சினிமாவில் ஒழுக்கம் நிறைந்தவர்கள், நல்ல குணம் படைத்தவர்கள் என்று பெயர்களை சொல்ல ஆரம்பித்தாலே நம்பியார், சிவகுமார் என்று ஒரு சில பெயர்கள்தான் வந்து நிற்கும். நடிகர், ஓவியர், எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், சிறந்த ஞாபகசக்தி என்ற எத்தனையோ அடையாளங்களை ஒற்றை மனிதராக சுமந்து இதுநாள் வரை வலம் வந்தவர் சிவகுமார். எப்படி தினமும் டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதோ, அதேபோல யோகாவும் செய்து வருபவர்.
[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]
நடிகர் முத்துராமன்
இவரது உடற்பயிற்சியாகட்டும், யோகாவாட்டும் பலருக்கு இன்னமும் இன்ஸ்பிரேஷன். முக்கியமாக மறைந்த நடிகர் முத்துராமனுக்கு வழிகாட்டியே இவர்தான்!! இது மட்டுமல்ல, அளவுகடந்த ஞாபகசக்தியினால் இலக்கியத்தில் எந்த மூலை முடுக்கிலிருந்தும் பாடல்களையும், அதற்குரிய விளக்கத்தையும் கண்ணை மூடி கொண்டு ருசிகரமாக சொல்லும் சொற்போர்வித்தகர்!!
பொறுமை எங்கே?
ஆனால் நேற்று நடந்த சில விநாடி சம்பவத்தால் எல்லாமே கேள்விக்குறியாகி விட்டன. ஆயிரம் திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் பொது இடங்களில் சற்று பொறுமை காக்க வேண்டும் என்பதை அந்த சில விநாடிகளில் அவர் மறந்ததால் வந்த வினை இது.
இளம் வயது ரசிகர்
பிரபலங்களின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டாமா என்று சிவகுமார் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் சிவக்குமார் வைத்திருந்த அன்பும் பாசமும்தான் அந்த சின்னத் தம்பி அத்தனை ஆர்வமாக செல்பி எடுக்க முண்டியடித்தார் என்பதே நிதர்சனம்.
விஜயகாந்த்
அந்த இளைஞரை பொருத்தவரை சிவகுமார் என்ற நடிகர், குறிப்பாக சூர்யா, கார்த்திக்கின் அப்பா! இந்த எண்ணத்தில்தான் செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சராசரி ரசிகனிடம் இத்தனை முரட்டுத்தனம், வெறித்தனத்தை காட்டியிருக்கவே கூடாது. காட்டுவதிலும் நியாயமே இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் மீது தனிப்பட்ட மரியாதையும், பாசமும் மக்களுக்கு பொங்கி எழுந்தது. அதுதான் விஜயகாந்தை தூக்கி கொண்டு போய் உயரத்தில் வைத்தது. ஆனால் பொது இடங்களில் அவர் நடந்து கொண்ட முறைதான், அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை மரியாதைகளையும் தகர்க்க வைத்தது.
இப்படி அடிப்பார்களா?
விஜயகாந்த் மீது பெரும்பாலும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொண்டர்களை பொது இடத்தில் அடித்துவிடுவது என்பதே. இது உண்மையிலேயே வருந்தத்தக்க செயல்தான். ஒரு தலைவர் தனது கட்சியின் வேட்பாளரையோ தொண்டர்களையோ பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அடித்து நொறுக்குதுவது என்பது மோசமான செயல்தான். ஒரு அரசியல் கட்சி தலைவர் வேட்பாளரை பொது இடத்தில் அடிப்பது என்பது தமிழக மக்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கட்சி தலைவர்தானே தன் தொண்டர்களை மரியாதையுடன் பாதுகாக்க வேண்டும். நேருவோ, காமராஜரோ, அண்ணாவோ, கலைஞரோ, ஜெயலலிதாவோ இப்படி பொது இடங்களில் அடித்து உதைப்பார்களா?
நாக்கை துருத்தினார்
இதேபோலதான் சட்டப்பேரவையிலும். அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அங்கே விஜயகாந்த் அரசியல்வாதியாக நடந்துகொள்ளாமல் நாக்கை கடித்து துருத்தியதை எத்தனை வருடங்கள் ஆனாலும் சட்டமன்ற வரலாறு மறக்காது. "தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ" இந்த வார்த்தை இவ்வளவு பிரபலமாக காரணம் என்ன? இதை விஜயகாந்த் பொது இடத்தில் குறிப்பாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசியதுதான்.
முன்கோபக்காரர்
விஜயகாந்த் அடித்து உதைப்பதும், சிவகுமார் செல்போனை தட்டிவிட்டதும் இரண்டுமே ஒரே காரியமாகாதுதான். ஆனால் இரண்டுமே பொதுமக்களிடம் காட்டக்கூடிய குண நலன்கள் கிடையாது. சிவகுமார் ஆரம்பத்திலிருந்தே யோகாவை பின்பற்றி வந்தாலும் இவர் ஒரு முன்கோபக்காரர் என்பதும் தெரிந்த விஷயம்தான். இதை ஏற்கனவே ஒருமுறை சிவகுமார் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு கோபமே வரக்கூடாது என்று சொல்ல முடியாது. உணர்வுகளால் பிசைந்தெடுத்தவன்தான் மனிதன். இவ்வளவு கோபம் ஒரு யோகா ஆசிரியரிடமிருந்து வந்ததுதான் பரபரப்பாகிவிட்டது.
பொது இடங்கள்
ஏற்கனவே கோபக்காரரான சிவகுமார் சமீபகாலமாகவே சற்று நிதானத்தை இழந்தும் காணப்படுகிறார். அதிக அளவில் டென்ஷன் ஆகிறார். இது அவரது பெர்சனல் விஷயம்தான். ஆனால் சிவக்குமாரின் வரிகளிலேயே சொல்வதானால், இதை அவர் தனிப்பட்ட முறையில் காட்டினால் யாருமே கேட்க முடியாது. ஆனால் பொது இடத்தில் இதை வெளிப்படுத்தும்போது நிச்சயம் விவாதமாகத்தான் செய்யும்.
|
பெரிய மனிதர்தான்
தற்போது சிவக்குமார் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான் என்பதை அவர் நிரூபித்து விட்டார். அந்த வகையில் சிவக்குமாரை நிச்சயம் மனதாரா பாராட்டலாம்.